புதன், 7 மே, 2008

ஓர் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் மன்றப் பயிலரங்கு

விழுப்பரம் மாவட்ட வலைப்பதிவர் மன்றத்தின் சார்பில் "தமிழ்க் கணிப்பொறி" வலைப்பதிவர் பயிலரங்கு 11-05-2008 ஞாயிறு அன்று காலை 9மணிமுதல் மாலை வரை ஒருநாள் நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பயிலரங்கு நடைபெறும்.
பயிலரங்கில் பயிலுநர், ஒருங்குகுறி எழுத்துருவை(Unicode font)ப் பயன்படுத்திடத் தேவையான தொழினுட்ப அறிமுகம் அளிக்கப்படுவர்.
வலைப்பூக்கள் அல்லது வலைப்பதிவுகள் இணைய இணைப்பு தவிர வேறு செலவு ஏதுமின்றி ஒருவர் தம்முடைய கருத்துகளையும், படைப்புகளையும், திறனாய்வுகளையும் உலக மக்களிடம் எடுத்துச் செல்ல உதவுகின்றன. அவ்வலைப்பதிவுகளை உருவாக்கவும் பயன்படுத்தவும் கையாளவும் பயிற்சி தரப்படுவர்.
விழுப்புரம் பயிலரங்கிற்கு எல்லா வகையிலும் "புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்" சார்ந்த திரு.இரா.சுகுமாரன், திரு.கோ.சுகுமாரன் இருவரும் தம் நண்பர்களுடன் பேருதவி செய்கின்றனர்.
பயிலரங்கு காலை 09.00 மணிக்குத்தொடங்கி மாலைவரை நடைபெறும். விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் முதல்வர் தலைமையில் தமிழ்நாட்டரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு முனைவர் க.பொன்முடி பயிலரங்கைத் தொடக்கி வைக்கிறார். கடலூர் தொலைத் தொடர்பு மாவட்ட துணைப் பொதுமேலாளர்திரு கே.இரவீந்தரன், கோட்டப் பொறியாளர் திரு.கி.இராதாக்கிருட்டிணன் ஆகியோர் சான்றிதழ் வழங்கி கருத்துரைக் கின்றனர்.
பகல் உணவுக்கு ஏற்பாடு செய்யதுள்ளனர். தமிழ் மென்பொருள் அடங்கிய குறுவட்டு (C.D) ஒன்று விலை ரூ.15=க்கு பயிற்சி பெறுவார்க்கு தரப்படும். பயிற்சிக்கெனக் கட்டணம் ஏதும் இல்லை.
பயிற்சிபெற விரும்புவார் கீழ்க்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்க:
94434 40401, 99527 41221, 94437 36444. மின்னஞ்சல்: thamizhanambi44@gmail.com
-விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் மன்றம்.

வியாழன், 24 ஏப்ரல், 2008

'தினமணி', 'திண்ணை'யில் வந்த கட்டுரை பற்றிய இருவரின் எழுத்துக்கள் பற்றி ...!



            18-03-2008 'தினமணி'யில் 'தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்'  என்ற ஈர்ப்பான தலைப்பில் ஒரு கட்டுரை வந்தது. அதன்பின் அதே கட்டுரை திண்ணையிலும் வந்தது. அக்கட்டுரை பற்றிய கருத்துரைகளை அடுத்துவந்த திண்ணையில் 'ரவிசங்கர்' எழுதியிருந்தார். அதற்குப்பின் 'கார்கில் ஜெய்' என்பார் 'தமிழ் எழுத்தில் உச்சரிப்புக் குறியீடு பற்றிய அலசல்' என்ற தலைப்பில் மேற்கண்ட செய்திகளைத் தொடர்பு படுத்தி எழுதியிருந்தார்.
            இரவிசங்கர் தம் கட்டுரையில், மூலக் கட்டுரை (தினமணி/ திண்ணையில் வந்தது) கூறும் முதன்மையான கருத்துக்களை எடுத்துக்கூறி அவை தொடர்பாக பன்னிரண்டு கேள்விகளை எழுப்பியிருந்தார். பிறமொழிகளில் உள்ள ஒலியை அப்படியே தமிழில் கொண்டுவர வேண்டும் என்றும் அதற்காகத் தமிழ் எழுத்துக்களை மாற்றவேண்டும் என்றும் கூறியுள்ளமை தொடர்பாகத் தம் கருத்துக்களைக் கூறியிருந்தார்.
            இறுதியில், பிறமொழிகளின் ஒலியைத் தம் மொழியில் ஏற்படுத்தற்காக புது எழுத்துகளைப் பெற்றுப் பரவலான மொழிகள் எவையெவை ? அவை தமிழுக்கு நிகராகத் தொன்மையும் செம்மொழித் தகுதியும் வாய்ந்தவையா?  புது எழுத்துக்களைப் பெற்றதால் மட்டுமே அவை பரவின என்பதற்குச் சான்றுளவா? என்ற கேள்விகளுக்கு மூலக் கட்டுரையாளரிடம் மறுமொழி இருக்காது என்றவாறு எழுதி இருந்தார்.
     கார்கில் ஜெய் தம் கட்டுரையின் தொடக்கத்திலேயே, தமிழில் புது எழுத்துக் குறியீடுகள் ஒலிப்பில் எந்த அளவு முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை என்ற அவருடைய ஐயப்பாட்டைத் தெரிவித்தாலும் மூலக்கட்டுரை ஆசிரியைக்குச் சார்பாகவே கருத்துரைத் துள்ளார். சில கோளாற்றுக் குறும்புக் கூற்றுக்களும் கூட காணப்படுகின்றன.
     Small irrigation system - என்பதற்கு மிகச்சரியான மொழிபெயர்ப்பு 'சிறுநீர்ப் பாசனம்'  சங்கடப் படுத்துகிறது - என்று இவர் எழுதுகிறார். இதைப் பார்த்ததும் 2005இல் வெளிவந்த துளிப்பா (ஐக்கூ) நூலான 'சிதறல்கள்' பக்கம்19இல் உள்ள ஒரு துளிப்பா நினைவுக்கு வந்தது. அது இது:
'சிறுநீர்ப் பாசனம் !' - மொழிபெயர்த்துச் சிரிப்பாய்ச் சிரித்தார்கள்.
'சிறுபாசனம்' என்றோம்.
மொழிவெறி என்கிறார்கள்!
     இத்தமிழ் மண்ணில் ஓடி ஆடி உருண்டு புரண்டு நீர்நிலைகளில் குதித்துக் குளித்து முங்கி மூழ்கி இம்மண்ணை நக்கிச் சுவைத்து நலம் பெற்ற மண்ணின் மைந்தர் எவரும் 'சிறுநீர்ப் பாசனம்' என்று மொழிபெயர்க்க மாட்டார்கள். முடக்கொற்றான் கொடியென்றும் அறியாது அதை, முடக் கொற்றான் மரம் என்று எழுதுவார் போன்றவர்களைத் தவிர, அது மிகச்சரியான மொழிபெயர்ப்பு என்று எவரும் கூறமாட்டார்கள். ஏனென்றால், பாசனப்பயிர், பாசன வாய்க்கால், பாசன நீர் போன்ற வழக்குச் சொற்கள் அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
      தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடான 'அருங்கலைச்சொல் அகரமுதலி' ( Dictionary of Technical Terms) பக்கம் 626இல் 'சிறு பாசனம்' என்றே இருப்பதைக் காணலாம் (இன்னொரு செய்தி : Small irrigation system என்று வழங்குவதில்லை; Minor irrigation என்றுதான் கூறுவது வழக்கம்!)
'ரிஷபம்' , 'மேஷம்' என்றால் மாடு ஆடு என்பதை விட இனிமையாக இருப்பதாக இவரிடம் யாரோ கூறினாரென்றும், 'எருமை' எனச் சமற்கிருதத்தில் திட்டியபோது, இலயோலாக் கல்லூரி மாணவர் பொறுமை காத்தனர், மகிழ்வுற்றனர் எனவும் இவர் கூறுகிற போது 'சாக்குப்பையிலிருந்து பூனை வெளியே வந்து விடுகிறது'! இவற்றைப் படித்தபின் இவர் அந்தக் கட்டுரை ஆசிரியையின் புகழ் பாடுவது குறித்து நமக்கு ஐயம் எழ வாய்பு பறிபோய் விடுகிறது.
        இரவிசங்கர் அவருடைய கேள்விகளுக்கு மூலக் கட்டுரையாளரிடம் மறுமொழி இருக்காது என்றவாறு எழுதி இருந்தார். இது அவருடைய 'ஆணவம்' , திம்ர் என்கிறார் கார்கிலைப் பெயரில் கொண்டவர் அப்படியானால்,
'தமிழ் வெறி'
'தமிழ் அழிவை நோக்கிப் போகும்'
'தனித்தமிழில் எழுதுவது அபத்தம்' ... என்றும்,
(தக்க தமிழ்ச்சொல் தமிழில் இருந்தாலும் பயன்படுத்தாமல்) 'அந்தஸ்து' என்ற அயற் சொல்லைத் தான் பயன்படுத்துவேன் என்றும் - எழுதுவதை என்னவென்பார் இவர்?


ஞாயிறு, 13 ஏப்ரல், 2008

ஏமாற்றுத் தமிழ்ப்பற்று!


காலஞ்சென்ற மதிப்பிறகுரிய திரு. இராம சம்பந்தம் ஐயா 'தினமணி'யின் ஆசிரியர் பொறுப்பினின்றும் நீங்கிய பின்னர், அந்நாளேட்டின் போக்கை நடுவுநிலைத் தமிழர்கள் கவனித்து வருகின்றனர்.
7-7-2007ஆம் நாள் தினமணியின் ஆசிரியருரை தமிழில் ஆங்கிலம் கலக்கப் படுவதைப் பற்றி மிகவும் கவலை தெரிவித்தது. ஊடகங்களும் இதழ்களும் தமிழ்மொழியின் அழிவிற்கு வழிகோலுவதாகக் கூறியது. தமிழைக் காப்பாற்ற வேண்டுமெனக் கவலைப்பட்டது. ஆனால், அன்றைய தினமணியிலும் அதற்குப்பின் வந்தவற்றிலும் தங்கு தடை தயக்கமின்றி ஆங்கிலச் சொற்கள் கலந்தெழுதியதை - எழுதிவருவதை - எவரும் இல்லையென மறுக்க இயலாது. இப்போக்கே, அந்த ஆசிரியருரைப் போலித் தனமாகவும் ஏமாற்றுத் தனமாகவும் எழுதப் பட்டுள்ளது என்பதைத் தெளிவாக்குகின்றது. துணுக்கத் துணுக்கான குற்றச் செய்திகளைத் தொகுத்து அதற்குக் 'கிரைம் செய்திகள்' என்று தினமணி தலைப்பிட்டதும் கூட அந்த ஆசிரியருரை எழுதப் பட்டதற்குப் பின்னர்தான்!
இவையிருக்க, 18-3-2008ஆம் நாள் தினமணியில் "தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்" என்ற தலைப்பில் ஓர் கட்டுரை வந்தது. ஈர்ப்பான தலைப்பில் எழுதப்பட்ட அக்கட்டுரையில், தமிழ் சீரழிக்கப் படுவதற்குக் கவலைப்பட்டு எழுதுகின்ற ஏடுகளில் காணப்படும் பல்வேறு பிழைகள் சிரிப்பை வரவழைப் பதாகக் கூறப்பட்டிருந்தது. அக்கூற்று ஓரளவு உண்மையே! ஆனால், அக்கட்டுரையாசிரியை, தமிழ்காக்கும் நோக்கில் எழுதுகின்ற எல்லா ஏடுகளையும் ஒட்டுமொத்தமாக அங்ஙனம் கூறுவது அவரின் அறியாப் போக்கையே காட்டுகின்ற தெனலாம்.
ஒவ்வொரு நாளேடும் இதழும் தமிழை முறையாகப் பயின்றவரைக் கொண்டு பிழைதிருத்தம் செய்தால் பல்வேறுவகைப் பிழைகளைக் களையலாம் எனக்கட்டுரையாசிரியர் கூறுவது நற்றமிழ் நலம்நாடும் நல்லறிஞர் நெடுங்காலமாக வலியுறுத்திவரும் கருத்தே.
இந்திமொழிப் பாடலை இந்திப்பாடகர் பாடும்போது இருக்கும் இனிமை தமிழ்ப்பாடகர் பாடும்போது இல்லை என யாரோ ஒரு பாடகி கூறியதாக இந்தக் கட்டுரையாசிரியை எடுத்துக் காட்டியிருக்கிறார். தமிழ்ப்பாடலைத் தமிழ்ப் பாடகர் பாடும்போது இருக்கும் இனிமை ஓர் இந்திப்பாடகர் அத்தமிழ்ப்பாடலைப் பாடும்போது இருக்க இயலாது என்ற உண்மையை எண்ணிப்பார்க்க வேண்டாவா?

அடுத்து, எம்மொழியும் எல்லாவகை எழுத்துக்களையும் பெற்றிருக்க இயலாது. ஒவ்வொரு மொழியும், அம்மொழி பேசும் மக்கள் வாழும் இடத்தின் தட்பவெப்ப நிலைகளைப் பொருத்தும் அவர்களின் உணர்வு உணவுகளைப் பொருத்தும் ஒலிகளையும் அவற்றிற்கான எழுத்துக்களையும் பெற்றிருக்கின்றன. சீன எழுத்தின் ஒலிப்பை வேறு எந்த மொழி பெற்றுள்ளது?

ஒருமொழி தன் இயல்பிற்கேற்காத ஒலியினை ஏற்பின் நாளடைவில் தனக்குறிய சீர்சிறப்புத் தன்மைகளை இழந்து, சிதைந்து வேறோர் கலவை மொழியாகிப்போகும். இதுவேநடைமுறை உண்மையென மொழியறிஞர்கள் விளக்குகின்றனர்.
'' என்ற எழுத்து தமிழ் எழுத்தில்லை என்று புறக்கணிக்கும் தமிழ்வெறியால் தமிழுக்குப் பேரிழப்பு என்று கட்டுரையாசிரியை சீறுகிறார்! உண்மை அறியாமல் உணராமல் வரம்பு கடந்து வாயவிழ்க்கும் கூற்றே இது! தமிழ் என்பதை ஆங்கிலத்தில், "டாமில், டமில், டாமிள், தமில், தமிள், தமிஷ், தமிஸ்..." -என்றெல்லாம் தானே எழுதுகின்றனர்! பலுக்குகின்றனர்! '' என்னும் தமிழ் எழுத்தைப் புறக்கணிக்கும் ஆங்கில வெறியால், ஆங்கிலத்திற்குப் பேரிழப்பு என அம்மையார் கூறுவாரா? ', , ன..' போன்ற எழுத்துக்களைப்புறக்கணிக்கும் சமற்கிருத வெறியால், சமற்கிருதத்திற்குப் பேரிழப்பு என அந்த அம்மையார் எழுதிவிடுவாரா?

பிற மொழிகளிலுள்ள அரிய நூல்களை மொழிபெயர்த்துத் தமிழை வளப்படுத்த வேண்டும் என்று கூறுவதுதானே சரி. அவ்வாறின்றி, பிறமொழி எழுத்துக்களையும் பிறமொழிச் சொற்களையும் தமிழ் ஏற்றுக்கொள்ள வேண்டுவென வற்புறுத்துவது எவ்வாறு சரியாகும்? அவ்வாறு அயல் எழுத்தும் அயற்சொற்களும் கலந்தால், தமிழ் தன் இயல்பு கெடும்; சீர்மை குன்றும்! தமிழை அடையாளந் தெரியாத மொழியாக்கி அழித்தொழிக்கும் செயலாகவே அம்முயற்சி அமையும் அன்றோ?
"பற்றுதலுக்குப் பதிலாய் வெறியை மேற்கொண்டால் தமிழ் அழியும்" என்று சாவமிடும் கட்டுரையாசிரியை, 'பற்று'க்கும் 'வெறி'க்கும் என்ன விளக்கங்களை வைத்திருக்கின்றார் என்பதையும், அவற்றை அளந்து காட்ட வைத்திருக்கும் அளவுகோல் என்ன என்பதையும் வெளிப்படுத்தாமல் கமுக்கமாக வைத்துக்கொண்டு விட்டார்.
"தகுதி" என்ற தகைசான்ற சொல்லிருக்க, "அந்தஸ்து" என்ற அயற்சொல்லைத்தான் எழுதுவேன் - என்று அடம்பிடிக்கும் கட்டுரையாசிரியை தமிழை வளர்த்து உலகம் முழுதும் பரப்ப விரும்புவதாகக் கூறுவதைப் படிக்கையில் சிரிப்புமட்டுமா வரும்? உணர்வுமிக்க தமிழர்க்குச் சீற்றமும் வருவது இயல்பே யன்றோ?
தமிழை முறையாக அறிந்துணரவில்லையெனக் கூறிக்கொண்டே, தமிழில் பிறமொழி எழுத்துக்களையெல்லாம் கலந்தெழுத வேண்டுமென வற்புறுத்துவதற்கும், அவ்வெழுத்துக்களை எப்படியெல்லாம் ஒலிக்கவேண்டுமென வலிந்த ஆய்வு(?) மேற்கொண்டு வழிவகை கண்டு வலியுறுத்துவதற்கும் இம்மண்ணில் யாருக்கும் எந்தத் தடையுமில்லையே!
இவர்கள், சமற்கிருதத்தில், உலகிலுள்ள எல்லா ஒலிகளுக்குமான பல்வேறு மொழி எழுத்துக்களையும் சேர்த்துக்கொள்ள வலியுறுத்தியும், அவற்றை ஒலிப்பதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்து கண்டுபிடித்துக் கூறியும் தொண்டாற்றலாமே! இவற்றை விளக்கி, "சத்தான சமற்கிருதம் சகமுழுதும் பரவட்டும்" என்ற தலைப்பில் 'தினமணி'யில் கட்டுரை எழுதித் தெளிவுறுத்தலாமே? விரைவில் செய்வார்கள் என்று நம்புவோம்!
---------------------------------------------------------------------

வியாழன், 3 ஏப்ரல், 2008

தமிழர் என்று அழைப்பதா?


அறுசீர் மண்டிலம் 

(விளம் மா தேமா) 

ஓதலில் தமிழிங் கில்லை!
          உரைசெயல் தமிழில் இல்லை!
காதலில் அரங்கம் சென்றால்
          கனித்தமிழ் இசையும் இல்லை!
நோதலில் வழிப டற்கே
          நுழையினுந் தமிழே இல்லை!
ஆதலின் தமிழர் என்றே
          அழைப்பதும் சரியே இல்லை!

'பின்னே வரைபேர்' என்னென்றார்!


வஞ்சி (விருத்தம்) மண்டிலம் 

(மா - மா - தேமாங்காய்) 

முன்னே, நீங்கள் யார்?என்றார்;
சொன்னேன் பெயரை; 'இல்லை,உம்
பின்னே வரைபேர்' என்னென்றார்!
என்னே இழிவே! தூ!சாதி!

திங்கள், 24 மார்ச், 2008

எத்தனென்று இருப்பாயோ?


அறுசீர் மண்டிலம் 

(குறிலீற்று மா - கூவிளம் - விளம் - விளம் - விளம் - காய்)

***********************************************************************************************

சோழ னென்றுனைச் சொல்லினர் ஐயகோ!
          சொத்தையென் றிருந்தாயே!
வேழ மென்றனர்; வீரனென் றார்த்தனர்
          வெளிறனென் றிருந்தாயே!
காழ முற்றசெவ் வுணர்வின னென்றனர்
          கரவனென் றிருந்தாயே!
ஈழ வீழ்வினை எண்ணவும் பொறையிலேம்!
          எத்தனென் றிருப்பாயோ?

திங்கள், 10 மார்ச், 2008

தீராப்பழி ஏற்கத் துணிவதோ?

இலங்கையில் இப்போது கொடுமையான போர் நடந்து கொண்டிருக்கின்றது. இலங்கை அரசின் முப்படைகளும் குழந்தைகள், முதியோர், பொதுமக்கள், போராளிகள் என்று எந்த வேறுபாடுமின்றி ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்து வருகின்றன. ஒரு நாட்டின் அரசே தன் குடிமக்களைக் கண்டமேனிக்குக் குண்டுகள் வீசிக் கொன்று குவிக்கின்ற, உலகில் வேறெங்கும் காண முடியாத கொடுமை , அங்கு நடந்து கொண்டிருக்கின்றது.
நார்வே, அமெரிக்கா, சப்பான் ஆகிய நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் நடுவர்களாக இருந்து உருவாக்கிய போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்புடைய யாருக்கும் தெரிவிக்காமல் இலங்கை அரசு தன்விருப்பமாகவும் தடாலடியாகவும் திடீரென முறித்துக் கொண்டது. இந்நிலையை உலக நாடுகள் ஏற்கவில்லை என்றாலும் எந்த நாடும் இதுவரை இலங்கை அரசைத் தட்டிக்கேட்க முன்வரவில்லை.
கடல்கொண்ட குமரிக்கண்டத்தின் எஞ்சிய நிலப்பகுதியாக இலங்கையை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்கள் அந்நாட்டின் ஆதிக்குடிகள். ஈழத்தின் மண்ணின் மைந்தர்கள். இலங்கையின் வடக்கு, கிழக்கு முதலிய பகுதிகளில் கி.பி.1832 வரைத் தம்மைத்தாமே ஆட்சி செய்து கொண்டு வாழ்ந்த மக்களின் பிறங்கடைகள். இவ்வுண்மையைத் தமிழகத் தமிழர்களில் பெரும்பாலரும் தெரிந்திருக்கவில்லை. இந்தியாவின் பிறபகுதிகளில் உள்ளவர்களில் இவ்வுணமையைத் தெரிந்தோர் மிகமிகக் குறைவானவரே!
இலங்கையில் உள்ள தமிழர்கள் எல்லாருமே தமிழகத்திலிருந்து சென்றவர்கள் என்றே பலரும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். கி.மு.150-இல் வரையப்பட்ட இலங்கையின் நாட்டுப்படத்தில் வடக்கு, கிழக்கு, வடமேற்குப்பகுதிகளும், தெற்கில் சில பகுதிகளும் தமிழ்மன்னர் ஆட்சிப் பகுதிகள் எனத் தெளிவாகக் காட்டப் பட்டுள்ளன. கி.மு.543இல் வட இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் சென்று சேர்ந்தவர்களே சிங்களவர்கள் என்று அவர்களின் 'மகாவம்சம்' என்ற சிங்கள நூல் குறிப்பிடுகிறது; வேறு சான்றுகளையும் ஆய்வாளர்கள் தருகின்றனர்.
சிறுபாணாற்றுப்படை(117-20), புறநானூறு (176:6-7) , பட்டினப்பாலை (191) போன்ற கழக (சங்க) இலக்கியங்கள் ' பதியெழ லறியாப் பழங்குடி' யான தமிழ்க்குடியே இலங்கையின் சொந்தக்குடி என்பதற்குச் சான்று சொல்கின்றன. அகநானூறு(88, 231, 307) குறுந்தொகையில்(189, 343, 360) மும்மூன்று பாடல்களும் நற்றிணையில் (366) ஒருபாடலும் எழுதிய ' ஈழத்துப் பூதன் தேவனார் ' தம் பாடல்களில் ஈழத் தமிழகத்தின் அகவாழ்வுச் சான்றுகளைக் காட்டியுள்ளார்.
1619இல் போர்த்துக்கீசியர் இலங்கையின் வடபகுதியையும், 1638இல் ஒல்லாந்தர் (டச்சுக்காரர்) இலங்கையின் கிழக்குப் பகுதியையும், 1795இலும், 1815இலும் ஆங்கிலேயர் இலங்கையின் பல பகுதிகளையும் கைப்பற்றி ஆண்டனர். ஆங்கிலேயரே 1833இல் இலங்கை முழுவதையும ஓர் அரசின் கீழ் இணைத்தனர். இலங்கையை ஆங்கிலேயர் ஆண்டபோது, தமிழகப் பகுதிகளும் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்தன. தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்த ஆங்கிலேயரே இலங்கைக்கும் ஆட்சியராக இருந்தார். ஏறத்தாழ ஐந்து ஆறு தலைமுறைகளுக்கு முன்னர், ஆசைகாட்டி ஆங்கிலேயரால் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மதுரை, முகவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே இலங்கை மலையகத் தோட்டத் தொழிலாளர்களாவர். அவர்களே இந்தியாவினின்றும் இலங்கைக்குச் சென்ற குடிகள்.
ஆங்கிலேயர் ஆட்சியினின்றும் இலங்கை 04-02-1948இல் விடுதலை அடைந்தது. விடுதலை பெற்ற கையோடு சிங்கள ஆட்சியாளர் இலங்கையின் தோட்டத் தொழிலாளர் 10இலக்கம் பேரின் குடியுரிமை, ஒப்போலை உரிமையைப் பறித்தனர்.(இலங்கையின் தோட்டத் தொழிலாளர் பட்ட துன்ப துயரங்களை 1980ஆம் ஆண்டில் தொலைக்காட்சி வழி பார்த்த இங்கிலாந்து மக்கள், இனி, இலங்கைத் தேயிலையை வாங்குவதில்லை என முடிவெடுத்து அறிவித்த செய்தி உலகம் முழுவதற்கும் இலங்கைத் தோட்டத் தொழிலாளரின் இரங்கத்தக்க நிலையை எடுத்துரைத்தது)
தமிழீழ மக்களால் "தந்தை" எனப் பெருமதிப்போடும் பேரன்போடும் அழைக்கப்பட்ட சட்டஅறிஞர் தலைவர் செல்வநாயகம் அவர்கள் பல்லாற்றானும் துன்புற் றுழலும் தமிழீழ மக்களின் இன்னலை நீக்கி வாழ்வுரிமையை உறுதிசெய்ய 1949இல் 'தமிழரசுக்கட்சி'யைத் தோற்றுவித்தார். பல அறப் போராட்டங்களைத் தமிழர்கள் அமைதியாக நடத்தினர். சிங்கள இனவெறி ஆட்சியாளர் அவற்றைப் பொருட்படுத்தவேயில்லை. 1956இல் தமிழுக்கு இடமளித்துச் சட்டம் வந்தது. ஆனால், அச்சட்டம் கிடப்பில் போடப்பட்டது. ஊர்திகளில் சிங்கள எழுத்து 'சிறீ' யைக் கட்டாயம் எழுத வேண்டுமென்ற ஆணையை எதிர்த்த தமிழர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.
05-06-1956இல் இயற்றப்பட்ட இலங்கை அரசமைப்புச்சட்டம் தமிழரின் மொழி உரிமை, சமய உரிமை, கல்வி உரிமைகளைப் பறித்தது. கொந்தளிப்பான சூழலில், நிலைமை மோசமாகிவிடாமல் தடுக்க, பண்டாரநாயகா 26-07-1957இல் தந்தை செல்வாவுடன் கலந்து பேசி ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார். ஆனால், அந்த ஒப்பந்தத்தின்படி சிங்கள அரசு நடந்து கொள்ளவில்லை. பெரும் போராட்டங்களுக்குப் பிறகு, 1958இல் தமிழில் நுழைவுத் தேர்வுகளை எழுதலாம் என்றும் வடக்கு-கிழக்கு மாநிலங்களில் தமிழைப்பயன்படுத்தலாம் என்றும் ஒரு சட்டம் வந்தது. ஆனால், அதுவும் செயற்பாட்டுக்கு வரவில்லை. 1965தேர்தலில் சிங்களரின் பெரிய கட்சிகள் இரண்டிற்குமே பெரும்பான்மை கிடைக்கவில்லை. 14தொகுதிகளை வென்ற தந்தை செல்வாவின் தமிழரசுக் கட்சியின் துணைதரவைக் கேட்டுப் பெற்று ஆட்சிக் கட்டிலேறிய தட்லி சேனநாயகா 25-03-1965இல் தந்தை செல்வாவுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார். ஆனால் அவரும் அவ்வொப்பந்தத்தை நிறைவேற்ற வில்லை.
தமிழர்களைப் புறக்கணித்து 22-05-1972இல் சிங்களர் கொண்டுவந்த அரசமைப்புச் சட்டமும் தமிழரின் மொழியுரிமை, மதவுரிமை, கல்வியரிமைகளை மறுத்து, சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்றது; புத்தமதம் அரசமதம் என்றது; தமிழினமாணவர் உயர்கல்வி தொழிற்கல்வியில் சேர சிங்கள மாணவரைவிட அதிக மதிப்பெண்கள் எடுத்தாக வேண்டு மென்றது; கூட்டாட்சி அமைப்பை மறுத்துச் சிங்கள ஒற்றையாட்சியையே உறுதி செய்தது. இச் சட்டத்தை 25-05-1972இல் தமிழரசுக் கட்சியினர் செல்வாவின் தலைமையில் கூடித் தீயிட்டு எரித்து எதிர்ப்பைத் தெரிவித்தனர். பயனேதும் ஏற்படவில்லை.
இவ்வாறு, உரிமை பறிப்புகளும், ஒப்பந்த மீறல்களும், ஒடுக்குமுறைத் தாக்குதல்களும் தொலையாத் தொடர்கதையாகிப் போனபின்னர் தான், நிலையான தீர்வுக்குச் சிந்திக்கத் தொடங்கி, இலங்கை ஒற்றையாட்சியிலிருந்து தமிழர் தாயகம் தனியே பிரிந்து போக வேண்டும் எனத் தமிழீழத் தலைவர்கள் முடிவெடுத்தனர். இம்முடிவே 14-05-1976இல் வட்டுக்கோட்டைத் தீர்மானமாகப் பின்னர் நிறைவேற்றப்பட்டது.
தந்தை செல்வா, 'தமிழர்களுக்கான விடுதலை பெற்ற நாடு வேண்டும்' என்பது தமிழீழ மக்களின் தீர்மானமே என்பதை விளக்கமாக வெளிப்படுத்த விரும்பினார். அதற்காகவே, தம்முடைய 'காங்கேசன் துறை' நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினின்றும் 03-10-1072இல் விலகினார். பிறகு அத்தொகுதிக்கு 05-02-1975இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் அவர்களின் தமிழீழப் பிரிவினைத் தீர்மானத்தை முன்வைத்துப் போட்டியிட்டார். மக்கள் அவரைப் பெரு வெற்றிபெறச் செய்து தமிழீழ விடுதலையே தமக்கு விடிவு தரும் என்ற தங்களின் முடிவினைத் தெளிவாக அறிவித்தனர். நாடாளுமன்றம் சென்று தமிழீழ விடுதலை பெற்றே தீருவோமெனச் செல்வா முழங்கினார்.
இதற்கிடையே, 1974சனவரியில் யாழ்ப்பாணத்தில் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்றது. 10-01-1974பிற்பகலில் மாநாட்டின் நிகழ்ச்சிகள் நடந்துகொண்டு இருக்கும்போது வந்த40காவலர்கள், மாநாட்டில் கலந்து கொண்டோரைக் கலைந்து செல்லும்படி அறிவித்துக்கொண்டே, அங்குக் கூடியிருந்த ஐம்பதினாயிரம் தமிழ் மக்களையும் அல்லோலகல்லோலப் படுத்தினர்! ஆண், பெண்களின் உடைகளை உருவி அலறியோட அடித்தனர்! துமுக்கியாலும் சுட்டனர்! மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் பலர் மின்தாக்குதலுக் குள்ளயினர்! இக்கொடிய வன்தாக்குதலில்11பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்று உயிருக்குப்போராடினர்!
உரிமை பறிப்புகளும் ஒப்பந்த மீறல்களும் உருவாக்கிய நம்பிக்கையின்மையாலும், - 1956, 1958, 1961, 1974ஆம் ஆண்டுகளில் இலங்கையில் தொடர்ந்து நடந்த சிங்களக் கொலை வெறியாட்டத்தாலும், இனஅழிப்புத் தாக்குதல்களாலும் தமிழர்கள் செய்வதறியாது கலங்கி நின்றனர். இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் நடந்த கொடுங்கொடிய தாக்குதலில் குழந்தைகளும் பெண்களும் முதியோரு மடங்கிய தமிழ்மக்கள் பட்ட சொல்லொணா அல்லல் அவலங்கள் ஈழத்தமிழ் இளைஞரைச் சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக எழுச்சி கொள்ளச்செய்தன. 05-05-1976இல் ஈழத்தமிழ் இளைஞர்கள் புதிய இயக்கத்தை உருவாக்கினர்.
காவற்படையும், போர்ப்படையும் கொண்டு சிங்கள அரசு தமிழினத்தை அடக்கி ஒடுக்கி அழிக்கும் போக்கு தொடர்ந்ததால் இலங்கையில் தமிழினம் வாழ்வுரிமையை முற்றிலும் இழந்துவிட்ட நிலையில், கொடுமைகளை எதிர்த்து நிற்கவும், தங்களைக் காத்துக் கொள்ளவு ம் ஆய்தம் தாங்கிய ஒரு படையை உருவாக்க வேண்டிய தவிர்க்க முடியாத நிலைக்கு ஈழத்தமிழர் தள்ளப்பட்டனர். அவ்வாறு, படையை உருவாக்கிக் கருவியேந்திப் போராடித் தம் தாயகத்தை நிறுவிய நாடுகள் பல உள்ளன. அந்நாடுகள் அ.நா.அவையின் (U.N.O) அனைத்துலகச் சட்டங்களின்படி ஒத்தேற்கப் பட்டுள்ளன( U.N.O. Declaration 1970, Universal Declaration of Human Rights, Section 15) என்பது அறியத்தக்க செய்தியாகும்.
ஈழத்தமிழரின் இன்னல் தீர்க்கும் பெருமுயற்சிக்கே தம் வளங்களையும் வாழ்நாட்களையும் செலவிட்ட ஈகச்செம்மல் தந்தை செல்வா 27-041977இல் மறைவுற்றார். 1977 ஆகத்து மாதத்தில் யாழ்ப்பாணத்திலும் திருக்கோணமலையிலும் சிங்களரால் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. பலர் கொல்லப்பட்டனர்.
1977ஆம் ஆண்டில் ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து மாபெரும் கண்டனப் பேரணி தமிழகத்தில் கலைஞர் கருணாநிதியார் தலைமையில் நடந்தது. தமிழகத் தலைவர்கள் பலரும் அறிக்கை வழி கண்டனம் தெரிவித்தனர். சிங்கள அரசின் ஒடுக்குமுறை ஓயாது தொடர்ந்தது..
11-07-1979இல் செயவர்த்தனா நிறைவேற்றிய அச்சுறுத்த வன்முறைத் தடுப்புச் சட்டம் தமிழர்களைக் கொடுங்கொடிய முறையில் வேட்டையாடியது. 1981ஆம் ஆண்டில் தமிழர்க்கெதிராக தீயிட்டழிப்பு, கொள்ளை, கொலை, கற்பழிப்பு நடந்ததை நாடாளுமன்றில் அமைச்சரே ஒப்புக் கொண்டார்.1983இல் சிங்கள அரசு மேற்கொண்ட அரச அச்சுறுத்த வன்முறைகளும், சிங்களக் காடையரின் கொள்ளை கொலைக் கொடுமைகளும், தமிழ்ப்பெண்கள் பலவகைக் கொடுமைகளுக் காளாக்கப்பட்டுச் சீரழிக்கப்பட்டதும், சிறையிலிருந்த தமிழர்களைக் கொடுந் தாக்குதலால் படுகொலை செய்ததும் தமிழ்நாட்டு மக்களைப் பேரெழுச்சி கொள்ளச் செய்தன. ஈழத் தமிழர்க்காகப் பரிந்து எழுந்த தமிழகத் தமிழர்களின் பேரெழுச்சி, இந்தியாவை அதிர்ந்து குலுங்க வைத்ததோடு அனைத்து உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்தது.
இலங்கையில் இன்றுவரை 70,000 தமிழர்களுக்குமேல் கொல்லப் பட்டிருக்கிறார்கள். ஏறத்தாழ 7இலக்கம் பேர் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து அல்லலுக் குள்ளாகி யுள்ளனர். உள்நாட்டில் 5இலக்கம் பேர் இடம்பெயர்ந்து இன்னற் படுகின்றனர்.
இனவெறிச் சிங்கள அரசு இந்தியா, பாக்கித்தான், இசுரேல், அமெரிக்கா முதலான நாடுகளிடமிருந்து ஆய்தங்களையும், வானூர்திகளையும், போர்ப் பயிற்சிகளையும், உளவு அறியும் உதவிகளையும் தடையின்றிப் பெற்றுத் தமிழர்களை ஒடுக்கி யும் அழித்தும் வருகிறது. சொந்த நாட்டு மக்களையே, தமிழர்கள் என்ற காரணத்தால் முப்படைகளையும் கொண்டு கண்டமேனிக்குக் குண்டுவீசிக் கொன்று குவிக்கின்றது. குழந்தைகள், பள்ளிச்சிறார், முதியோர் என்றும், கோயில், பள்ளிவாயில், திருச்சவை என்றும் எந்த வேறுபாடும் கருதாமல் குண்டுமழை பொழிந்து கொல்கின்றது. 22-02-2002இல் ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை நார்வே முதலிய நாடுகளுக்கும் தெரிவிக்காமல் தன்விருப்பமாக முறித்துக் கொண்டு, இலங்கை மண்ணில் தமிழர்களே இல்லையெனும்படியான நிலையை உருவாக்கும் நோக்கில், கொடுமையாகக் கொலைவெறித் தாக்குதல் செய்து வருகிறது.
ஈழத்தமிழருக்கும் தமிழ்ஈழ விடுதலைக்கும் துணைநிற்கும் பேரெழுச்சியான நிலைமை 1983முதல் தமிழகத் தமிழரிடம் காணப்பட்டது. ஆனால், 1991இல் நடந்த இராசீவ் காந்தி கொலைக்குப் பின்னர், அவ்வெழுச்சி குறைந்து போனது. அதே போழ்தில், தமிழ்ஈழத்தைப் பற்றியும் ஈழப் போராளிகளைப் பற்றியும் பேச, எழுதவும் தயங்குகின்ற நிலை அடக்குமுறை அச்சுறுத்தலால் உருவாக்கப் பட்டது. இன்னும், தமிழ், தமிழர் என்றாலே தடை, தளைப்படுத்தம், சிறைப் படுத்தம் என்ற நிலை ஏற்பட்டது. என்றாலும், துணிவும் உணர்வும் மிக்க சிலரால் இந்த இறுக்கமான நிலையில் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்வேற்பட்டு வருகிறது.
இந்த மண்ணில், ஈழப் போராளிகளால் எவ்வகை வன்முறை நிகழ்வதையும் தமிழகத்தில் உள்ள எவரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அதே போழ்தில், தமிழகத் தமிழரின் தொப்பு ள்கொடி உறவான ஈழத்தமிழர்கள் அவர்கள் கண்முன்னேயே அல்லற் படுவதையும் அழிவதையும் எங்ஙனம் பொறுமையோடு பார்த்துக் கொண்டிரு ப்பார்கள்?
ஆகத்து 2002முதல், -9 என்னும் பெயரிய யாழ்ப்பாண நெடுஞ்சாலையை மூடியதால், யாழ்ப்பாணத்திலுள்ள இலக்கக் கணக்கான தமிழ்மக்கள் இன்றியமையா உணவுப் பொருள்களான அரிசி முதலானவும், மருந்து, துணி முதலானவும் கிடைக்காமல் பட்டினியாலும் நோயாலும் சாகின்ற நிலை உருவாக்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்கள் தம் அரத்த உறவான யாழ்ப்பாண மக்களுக்கென அளித்த உணவு, மருந்துப் பொருள்களை ச் செங்குறுக்கைக் கழகத்தின் வழியாக யாழ்ப்பாணத்திற்கு அனுப்புதற்கும் இந்திய அரசு இசைவு தரவில்லை. பலரும் பலவாறு வேண்டுகோள்கள் விடுத்தும் தமிழ்நாட்டரசும் கண்டுகொள்ளவில்லை!
இனஅழிப்பிற் காளாகி அழியும் ஈழத் தமிழர் நிலையில், இந்திய அரசிலும் தமிழ்நாட்டரசிலும் ஆட்சியாளர் மாறியதால் எவ்வகைப் புதிய விளைவும் ஏற்படவில்லை. இராசீவ் காந்தி கொலையுண்ட நிகழ்ச்சியுடன் 40 இலக்கம் ஈழத்தமிழரின் நிகழ்கால எதிர்கால வாழ்வை முடிச்சுப் போடக்கூடாது என்று 'தினமணி' (20-04-2002) ஆசிரியருரையும், 'தமிழ் ஓசை' (13-02-2008) ஆசிரியருரையும் மற்றும் பல்வேறு நடுநிலை அறிஞரும் கூறுவதை ஆட்சியாளர் கருத்திற் கொண்டதாகத் தெரி யவில்லை.
நடுவண் அரசிலும் தமிழ்நாட்டு அரசிலும் அமர்ந்துள்ள தமிழர்களாகிய அமைச்சர்களும், நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் அமர்ந்திருக்கின்ற தமிழர்களும், தமிழ்மண்ணில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களாக வலம் வந்துகொண் டிருப்போரும், தமிழராக உள்ள ஒவ்வொருவரும் நெஞ்சில் கைவைத்து எண்ணிப்பார்க்க வேண்டிய நேரமிது! ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டம் தமிழினத்தின் போராட்டமாகும். அப்போராட்டம் தக்க தீர்வினை எட்டாமல், எக்காரணங் கொண்டும் வீழ்ச்சி அடையக்கூடாது. ஈழத்தமிழர் வீழ்ந்தால் அது, தமிழினத்தின் வீழ்ச்சியாகவே அமையும்!
இந்த இக்கட்டான சூழலைப் புரிந்து கொள்ளாமல் பொருள் சுரண்டும் அரசியலிலும், நாற்காலிக் கனவு நாட்டத்திலும், தன்னலவெறிப் போக்கிலுமே தமிழகத் தலைவர்கள் சென்று கொண்டிருப்பா ராயின், தீராப்பழி வந்து சேரும்! தமிழர் வரலாற்றில் இழிவு சேர்க்கும் பக்கங்களுக்குக் காரணமாகிப் போவோம்! எள்ளிநகைக்க இலக்காகிப் போவோம்! இவ்வுண்மையை மறந்துவிடக் கூடாது!
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை ஓராயிரம் முறைக்கும் மேல் கடுந் தாக்குதல் நடத்தியிருக்கின்றது. தமிழக மீனவர்களின் மீன்பிடி வலைகளையும், அவர்கள் பிடித்த மீன்களையும், படகுகளையும் கொள்ளையடித்துக் கொடுங் கூத்தாடி அவர்களைச் சுட்டுக் கொன்று வருகின்றது. 250க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் சிங்களவெறித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். பல நூறு மீனவர்கள் படுகாயப் படுத்தப் பட்டுள்ளனர்.
பலமுறை தமிழ்நாட்டு மீனவர்கள் இந்தியக் கடல் எல்லைக்குள்ளேயே சிங்களக் கடற்படை யினரால் தாக்கப்பட்டு ள்ளனர். இப்படிப்பட்ட தாக்குதல்கள் நடக்கும் போதெல்லாம் இந்தியக் கடற்படையும் கடலோரக் காவற்படையும் எங்கே போயிருந்தார்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. ஒரு முறையும் கூட இவர்கள் தமிழக மீனவர்களை சிங்களர் தாக்குதலினின்றும் தடுத்துக் காத்ததாகச் செய்தி வந்ததில்லை. ஓரிரு இலக்கம் உருவாக்களை இழந்த உயிர்களுக்கு இழப்பீடாகத் தந்துவிட்டுக் கடமையை முடித்துக் கொள்ளும் அரசாக தமிழ்நாட்டரசு இருந்துவருகிறது.
இந்நிலையில் இந்திய அரசு, சிங்கள இனவெறி அரசுக்குக் கதுவீ (RADAR) உள்ளிட்ட உளவுக் கருவிகளும், ஆய்தங்களும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்து கொடுத்து வருகின்றது! பூனாத் தேசியப் பாதுகாப்புக் கழகத்திலும் பிற இடங்களிலும் வழக்கமாகப் பிற நாட்டினர்க்கு விளக்கப்படாதவை பற்றியெல்லாம் இலங்கைப் படையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு விளக்கிக் கூறிப் பயிற்சி தரப்படுகின்றது. இந்தியப் படையின் உளவுப்பிரிவு அதிகாரிகள் குழு கொழும்பு சென்று, அங்குப் போர்ப்படை உளவுப் பயிற்சிப் பள்ளி அமைப்பதற்கு ஆவன செய்து தருகின்றது (தமிழ் ஓசை-11-02-2008) என்ற செய்தியும் வருகின்றது.
இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களின் குருதிவழிச் சொந்தங்களைக் கொன்றழிக்கவும் இன்னும் தமிழ்நாட்டு மீனவர்களையே தாக்கிக் கொல்லவும், இந்தியா இலங்கை அரசுக்குச் செய்யும் பல்வேறு உதவிகளும் சிங்களர்க்குப் பயன்படுகின்றன. இவ்வகையில், தமிழர்களின் வரிப்பணமே தமிழர்களைத் தாக்கவும் அழிக்கவும் பயன்படுத்தப் படுகிறது எனில், மிகையன்று.
தமிழ்நாட்டரசு இவற்றைத் தக்கவாறு எதிர்த்துத் தடுக்க வேண்டுமல்லவா? இந்தி யஅரசை முறையாகச் செயற்படச் செய்து ஈழத்தமிழரையும் தமிழக மீனவரையும் காக்க வேண்டாவா? பதவிக்காகவோ வேறு அரசியல் பயன்களுக்காகவோ, இந்திய அரசை வற்புறுத்தி தமிழர்களைக் காத்திடும்படிச் செயற்படச் செய்யாமல், வாய்மூடி இருப்பதை விட இல்லாமற் போவதே மேலல்லவா!
இந்த அரசுகளை வற்புறுத்தி ஈழத் தமிழினத்தைக் காக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழினம் உள்ளது. தமிழிளைஞர்கள இம்முயற்சியில் முழுமையாக ஈடுபட வேண்டும். இக்கடமையில் தவறினால், ஈழத்தமிழர் நசுக்கி அழிக்கப்பட்டு விடுவார்கள். நெருக்கடியான இக்காலக் கட்டத்தில் விழிப்புற் றெழுந்து இதைக் கட்டாயம் செய்தாக வேண்டும். இல்லையேல், தீராப்பழி ஏற்று இழிவைச் சுமக்க வேண்டியவர்களாகிப் போவோம்!
புகழெனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்” என்று கூறும் புறநானூற்று வரிகள் வெறும் எழுத்துகள் அல்லவே!