சனி, 23 பிப்ரவரி, 2008

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் "செயலும் செயல்திறனும்"


          இருபதாம் நூற்றாண்டில் தூயதமிழ் செழுமைமிக்க, உயர்ந்த, அறிவுசான்ற இலக்கியங்களை ஆக்கிக்கொடுத்த தன்னேரில்லாப் பெரும்பாவலர்!
தூயதமிழைப் பரவலாகப் பலருக்கும் உணர்த்தி ஊன்றிய அரிய தமிழ் மீட்பர்!
மூத்த தமிழை முழுமையாய்க் காத்து நின்ற கேடயம்! செத்தமொழி தாங்கிகளின் சித்தம் கலங்கடித்த போர்வாள்!
ஒப்பற்ற தமிழறிஞர்! உயர்ந்த ஆய்வாளர்! அரிய மெய்யறிவுச் சிந்தனையாளர்!
சொல்லுக்கும் செயலுக்கும் மாறுபாடு வேறுபாடு இல்லாத மெய்வாழ்வர்! ஈடற்ற செழுந்தமிழ்ச் சொற்பொழிவாளர்!
தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய மூன்று இதழ்களைச் சிறப்புற நடத்திய ஈடெடுப்பற்ற இதழாளர்!
சிறந்த இலக்கியப் புலமையாளர்! நல்ல ஓவியர்! திறஞ்சான்ற அச்சுத்தொழில் வல்லார்!
தமிழ்இன இழிவு நீக்கத்திற்கும் தமிழ்நாட்டு விடுதலைக்குமாக அயராது பொருது நின்ற போராளி!
மூன்றுமுறை தமிழகவிடுதலை மாநாடுகளை நடத்திய துணிவாற்றல் சான்ற வினையாண்மையர்!
தமிழ்மொழி தமிழ்மக்கள் தமிழ்நாட்டு நலன்களுக்காக முப்பத்தைந்து முறைகளுக்கும் மேல் சிறைசென்ற அஞ்சாநெஞ்சர்!
சலுகை பெறவும் சாதிகூடாதென வாழ்ந்த சாதிமறுப்பாளர்! சாதிமறுத்து மணம்புரிந்து கொண்டவர்! தம் மக்களுக்கும் அவ்வாறே மணம்செய்வித்தவர்!
......இவ்வாறு பல்வேறு சிற்ப்புக்களுக்கு உரியவரே துரை.மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்ட பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆவார்.
தமிழகப் பிரிவினையை வலியுறுத்தி எழுதியும் பேசியும் வந்ததாலும் அதற்கென மாநாடுகள் நடத்தியதாலும் வேறு காரணங்களாலும் இப்பெரியாரின் அளப்பரிய ஆற்றல், அவர் உயிரோடிருந்த காலத்தும், மறைந்த பின்னரும் கூட இருட்டடிக்கப்பட்டே வருகின்றது.
இவ்வரும்பெரும் ஆற்றல் சான்ற பெரியார், செயல்திறன் பற்றிய அடிப்படைத் தெளிவில்லாது அலமரலுற்று உழலும் மக்கள்பால் கழிவிரக்கங் கொண்டு ஆக்கித்தந்த நூலே, "செயலும் செயல்திறனும்" என்ற தலைப்பினதாகும்.

நூலாக்க விளக்கம்
சிறுவர்களுக்கான 'தமிழ்ச்சிட்டு' இதழில், பாவலரேறு "செயலும் செயல்திறனும்" என்ற தலைப்பில் 1980 முதல் 1987 வரையிலான ஏழாண்டுக் காலத்தில் ஆசிரியருரைக் கட்டுரைகளாக 56 இதழ்களில் எழுதி வெளியிட்டார். அக்கட்டுரைகளே, பின்னர் நூல் வடிவம் பெற்றன. கழகக்கால (சங்ககால) இலக்கியப் பாடல்களுக்கு இணையாகப் பாட்டியற்றும் ஆற்றல் பெற்ற பாவலரேறு ஐயா அவர்கள், பண்டைய உரையாசிரியர்களின் செறிவான புணர்ப்புமிக்க உரைநடைபோலும் எழுதுவதிலும் தனித்திறம் பெற்றவராயிருந்தார். இருந்தபோதிலும் இந்நூலைச் சிறுவர்களும் பரிந்து கொள்ளுமாறு எளியநடையில் எழுதியிருக்கின்றார். இந்நூலின் முதற்பதிப்பு 1988ஆம் ஆண்டிலும் இரண்டாம் பதிப்பு 2005ஆம் ஆண்டிலும் வந்தன.

நூலின் உள்ளடக்கம்
செயல்களை எவ்வெவ் வகையில் எவரெவர் மேற்கொள்ள வேண்டும்? எவ்வெவ்வாறு செய்யவேண்டும்? என்னென்ன முயற்சிகள் முன்னேற்பாடுகள் அவற்றுக்குத் தேவை? செயல்களுக்கு இடையில்வரும் இடையூறுகள் இடர்ப்பாடுகள் பொருள்தடைகள் ஆள்தடைகள் எவ்வெவ்வாறு இருக்கும்? அவற்றை எப்படியெப்படிக் கடந்து மேற்செல்லுதல் வேண்டும்? அவற்றில் என்னென்ன சிக்கல்கள் இருக்கும்? அவற்றை எப்படியெப்படித் தீர்ப்பது? –- என்பவை பற்றியும், நல்ல அரிய பயனுள்ள செயல்களைத் திறம்படச் செய்வது எப்படி? எவ்வெவற்றில் எத்தகைய கவனமும் கண்காணிப்பும் கொள்ளுதல் வேண்டும்? அவற்றுக்கு எவரெவரைத் துணையாளராகவும் பணியாளராகவும் கொள்ளுதல் வேண்டும்? அவர்களைத் தேர்ந்தெடுப்பது வப்படி? - – என்பவை பற்றியும் எல்லாருக்கும் விளங்கும் வண்ணம் இவ்வரிய நூல் நன்கு எடுத்து விளக்குவ தாகவும் ஆசிரியரே முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

நோக்கம்
முன்னுரை முதலாக இருபத்தைந்து தலைப்புகளில் விரிவாகவும் விளக்கமாகவும் எளிதில் புரியுமாறும் எழுதப்பட்டுள்ள இந்நூல், 250 பக்க அளவில் அமைந்துள்ளது. 'செயல்களே உயர்வதற்கு அடையாளம்; பெருமைக்கும் சிறுமைக்கும் செயல்களே அடிப்படை; தமக்கும் பிறர்க்கும் இன்பம் தரும் பயனுடைய அழியாத செயல்களே அறச்செயல்கள்' என்று விளக்குகின்ற ஆசிரியர், இளைஞர்களின் மனவுணர்வு தீயவற்றில் வேரூன்றா வண்ணம் கட்டிக்காக்கும் கடமை உணர்வில் இந்நூலில் கருத்துக்கள் வைக்கப்படுகின்றன எனக் கூறுகிறார்.

நூலின் விளக்கம்
எந்த ஒரு செயலையும் தொடங்குதற்குமுன் நன்றாக, நம் அறிவு முழுமையாக அதில் ஈடுபடும் அளவிற்கு எண்ணிப் பார்க்க வேண்டும்; சிந்தனையும், ஆர்வமும், அறிவும் அதிலேயே ஈடுபடுத்தப்படவேண்டும். நமக்கு இயலும் வினையளவு - ஒல்லும் அளவு -அறிந்து வினைசெய்தல் வேண்டும். வினையின் முடிவாக விளையும் பயன் நல்லதாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
நம் தகுதிக்குத் தாழ்வான செயல்களைத் தவிர்க்கவேண்டும். வினையில் ஈடுபடத் தேவையான பணம், உழைப்பு, காலம் குறித்தும் ஆய்ந்துபார்க்க வேண்டும். நம் திறமையைச் சரியாக மதிப்பிட்டுக் கொள்வதில்தான் நம் வெற்றியே அடங்கி யிருக்கின்றது. எதிர்ப்புகளைத் தாங்கிக் கொள்ளும் மனவலிமை இருந்தாலொழிய செயலில் படிந்து ஈடுபட முடியாது.
வினைக்கு முதல் தேவை பொருள். அடுத்தது கருவி. வினையறிந்த தக்கவர்களைத் துணைவர்களாககக் கொள்ளுதல் வேண்டும். வினைக்குரிய காலத்தையும் இடத்தையும் நன்கு தேர்ந்து திறம்படச் செய்யவேண்டும். உடலுறுதி, உள்ளவுறுதி, அறிவுறுதி ஆகியவை மிகவும் தேவை. இறங்கிய செயலில் பின் வாங்காது தாழ்ச்சியுறாமல் உழைக்க வேண்டும். முன்னெச்சரிக்கை, கண்காணிப்பு கட்டாயமாக இருக்க வேண்டும் -என்பனவற்றையெல்லாம் எடுத்துக் காட்டுகளோடும் மேற்கோள்களோடும் நேர்த்தியாக, சுவைபட இனியநடையில் நூலில் விளக்குகின்றார்.
இன்னும், இடையூறுகண்டு மனந்தளராமை, இழப்புகண்டு சோர்வுறாமை, துன்பம் கண்டு துவளாமை, தவறான வழிகளைக் கடைப்பிடியாமை, துணைவருவாய் கருதி வேறு வினைகளில் ஈடுபடாதிருத்தல், துணையாளரையும் பணியாளரையும் அமர்த்துகையில் கவனிக்கவேண்டியவை பற்றியெல்லாம் விளக்கமாகக் கூறுகிறார்.

எச்சரிக்கைகள்
ஆசிரியர் செய்திகளைச் சுவைபட விளக்கும் திறத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு :
எச்சரிக்கைகள் ஆறு எனக் குறிக்கின்றார். இதற்குப்பின் இது, இதனால் இது, இதற்காக இது, இதுபோனால் இது, இது வந்தால் இது, இதுவே இது என்ற அந்த ஆறு எச்சரிக்கைகளைப் பற்றிக் கூறி அவர் விளக்குவதைப்பார்ப்போம்.
எச்சரிக்கை 1. இதற்குப்பின் இது : "இந்த வினையைச் செய்து முடித்தபின்னர் இந்த வினையைச் செய்யவேண்டும்; அதற்குப்பின் இதைச்செய்ய வேண்டும் என்று வரிசை முறையாகத் திட்டமிட்டுக் கொண்டு ஒருமுறைக்குப் பலமுறையாக எச்சரிக்கையுடன் எண்ணிப்பார்த்துச் செய்யவேண்டும்" என்று விளக்கம் தருகிறார்.
மின்குமிழியைப் (electric bulb) பொருத்திவிட்டுப் பின்னர்ச் சொடுக்கியைப் ( switch) போடவேண்டும் என்று ஓர் எடுத்துக்காட்டையும், பேருந்து ஓட்டுநர், எந்திரம் ஓடிக்கொண்டிருப்பதை நிறுத்திவிட்டே வண்டியினின்றும் இறங்க வேண்டும் என்று இன்னோர் எடுத்துக்காட்டையும் தருகிறார். மேலும், ஆங்கிலத்தில் கூறப்படும் "one by one", "one thing at a time" என்னும் கருத்துமொழிகளும் இதையே வலியுறுத்தும் என்றும் விளக்குகிறார்.
இவ்வாறே, மற்ற ஐந்து எச்சரிக்கைகளையும் விளக்கிக் கூறுகிறார். அந்த எச்சரிக்கைகளுக்கு அவர் தந்துள்ள எடுத்துக்காட்டுகளுள் ஒவ்வொன்றை மட்டும் இப்பொழுது பார்க்கலாம்.
2. இதனால் இது : சமையல் முடித்தபின், அடுப்பை முழுவதுமாக அணைக்காமல், அரைகுறையாக அணைத்துவிட்டு வந்தால், காற்றில் கனன்று ஒரு சிறு நெருப்பும் வீட்டையே எரித்துவிடக்கூடும்.
3. இதற்காக இது : மிதிவண்டி, உந்துவண்டி சக்கரங்கள் அடிக்கும் சேற்றைத் தடுக்க, சக்கரங்களின் மேல் மட்காப்பு (mudguard) போடுதல்.
4. இது போனால் இது : பாய்மரக்கப்பலில் பாய்மரம் கிழிந்துவிட்டால் உடனடி பயன்படுத்தத்திற்குரிய வகையில் துடுப்புகளைப் பயன்படுத்தல்.
5. இது வந்தால் இது : மின்சாரத்தடை வந்தால் விசிறியும் மெழுகுத்திரியும்
(candle) மண்ணெய் அடுப்பும் பயன்படுத்தல்.
6. இதுவே இது : திருகாணியைத் திருகி எடுக்க ஏற்ற திருப்புளி இல்லாத பொழுது அகலமான நுனியுடைய கத்தியையோ இரும்புக் கருவியையோ பயன்படுத்தல்.

எடுத்துக்காட்டான நிகழ்ச்சி
பாவலரேறு ஐயா ஒரு சமையம், விழுப்புரத்தில் நடைபெறவிருந்த ஒரு கலந்துரையாடலுக்கு வரவேண்டியிருந்தது. விழுப்புரம் வழிப்போக்கர் விடுதியில் மாடிப்பகுதி அறையைக் குறிப்பிட்ட இரண்டு நாட்களுக்குப் பதிவு செய்யம்படிக் கூறினார். விழுப்புரம் வழிப்போக்கர் விடுதியில் அதற்குமுன் இரண்டு மூன்று முறை தங்கியிருந்தவராகையால், அவ்விடுதியின் அமைப்பு வசதிகளைப்பற்றி அவருக்குத் தெரியும்.
அவர் கூறியவாறே அறையைப் பதிவு செய்தபின், செய்தியைத் தொலைப்பேசி வழியாகக் கூறியபோது, அவர், "தம்பி, விடுதிக் காவலரிடம் முன்பே சொல்லி வைத்துவிடுங்கள்; ஆறு மணிக்கெல்லாம் வந்துவிடுவோம் என்பதைச் சொல்ல மறந்து விடாதீர்கள்! மழைக்காலமாக இருப்பதால் இரண்டு குடை இருக்க வேண்டும்; மின்தடையின் போது பயன்படுத்த மண்ணெய் விளக்குகள் வேண்டும்! மெழுகுத்திரியும் இருக்கட்டும்! ஞாயிற்றுக்கிழமை அருகில் உள்ள தேநீர்க்கடை மூடியிருக்கும்! பேருந்து நிலையம் அல்லது தொடர்வண்டி நிலையத்திற்கருகில் போய்த் தேநீர் வாங்கிவரத் தெறுமக்குடுவை (thermos flask) தேவை! இரவில் சிற்றுண்டி தேவைப்படுவோருக்கும் ஏற்பாடு செய்யவேண்டும்!" என்றெல்லாம் சென்னையிலிருந்து கூறுவார்.
அவர் தம் வாழ்க்கையில் மேற்கொண்டிருந்த நடைமுறைகளும், பட்டறிவும், திருக்குறளில் ஆழ்ந்து அவர் மூழ்கியெடுத்த முத்துக்களும், அவருக்கே உரிய ஆழ்ந்த அறிவுமே நூல் முழுவதிலும் கருத்துக்களாக வெளிப்பட்டிருக்கின்றன என்பதற்கு இந்நிகழ்ச்சி ஓர் எளிய சான்றெனலாம்.

அரிய விளக்கங்கள்
நுண்மாண் நுழைபுலத்துடன் சில சொற்களுக்கு அவர் கூறும் விளக்கங்கள் வேறெங்கும் காணமுடியாதவை. அவற்றுள் சில :
விருப்பம் என்பது உயிருக்கு ஏற்கெனவே தொடர்பான ஒரு பொருளின் மேல் தானாகச்செல்லும் மனநாட்டம்.
செப்பம் என்பது செவ்வையாக, திருத்தமாக, அழகாக, தவறில்லாதபடி என்க.
நுட்பம் என்பது மிகவும் பொருத்தமாக, கூர்மையாக, ஆழமாகக் கவனித்து என்க.
ஒட்பம் என்பது தெளிவாக, விளக்கமாக, அறிவுணர்வு புலப்படும்படி என்க.
காலம் என்பது வேளையோ, பருவமோ, நம் அகவையோ, வினைக்குரிய சூழலோ என்றில்லாமல், எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு வாய்ப்புக்கூறு என்றே பொருள் கொள்ளுதல் வேண்டும்.
இடம் என்பது பாதுகாப்பான, வினை செய்வதற்குரிய, பகைவர்கள் எளிதில் நெருங்க இயலாத, முயற்சிகளுக்கேற்ற வாய்ப்புகள் மிகுந்த இடம் என்று பொருள்படும்.
முதல் என்பது பொருளும், உழைப்பும், அவ்வுழைப்பக்கேற்ற அறிவும், இவ்வனைத்தையும் சிதறவும் தளரவும் செய்யாத ஊக்கமும் ஆகும்.
உறுதி என்பது உடலுணர்வுத் தன்மையையும் ஊக்கம் என்பது உள்ள உணர்வுத் தன்மையையும் குறிக்கும். அவ்வாறு குறித்தாலும் உடலில் உள்ளமும் உள்ளத்தோடு உடலும் பொருந்தியிருப்பதால் பொதுவாக இரண்டின் தன்மைகளையுமே இவ்விரண்டு சொற்களும் குறிக்கக் கூடியன.
ஒருவன் பிறந்து தன்னை உலகுக்கு அறிவிக்க வேண்டும். அவ்வறிவித்தல் நிலைத்து நிற்றல் வேண்டும். அதற்குத்தான் புகழ் (ஒளி) என்று பெயர்.
அறியாமை ஒன்றைத் தெரிந்து கொள்ளாமை.
பேதைமை ஒன்றைத் தெரிந்து கொள்ள இயலாமை.
மூவுரம் என்பது உடல்உரம், உள்ளஉரம், அறிவுஉரம் என்பவற்றை - இவற்றின் உறுதிப்பாட்டைக் குறிக்கும். மூவுரம் மும்முரம் என்று திரிந்தது.
அறிவு மூன்று காலத்திற்கும் உரியது. அதன் பயன் நிகழ் காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் மட்டுமே உரியது.
கடந்தகால அறிவு வரலாறு. நிகழ்கால அறிவு வாழ்க்கை. எதிர்கால அறிவு அறிவியல்.
அறிவைப் பெறுவதற்கான ஐந்து வழிகள் காட்சி, கேள்வி, உசாவல், கல்வி, பாடு என்பன.
நமக்கு மட்டும் அறிவுண்டு என்று நினைப்பது போன்ற அறியாமை வேறிலது.
ஒருவன் தன்னையிழந்து தாமாக மாறுவதையே அன்புவாழ்க்கை, அருள்வாழ்க்கை, வாழ்வாங்கு வாழும் வாழ்க்கை என்று சான்றோர் கூறுவர்.
- இவைபோலும் பல விளக்கங்கள் நூலின் பல இடங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.

சமன்பாட்டு விளக்கங்கள்
இடையூறு கண்டு மனந்தளராமை என்ற தலைப்பில் அஞ்சாமை வேண்டும் என வலியுறுத்துகையில் அஞ்சாமையுடன் வீரமோ அறிவோ சேருங்கால் விளைவு எவ்வாறிருக்கும் என்பதைக் கணக்கியல் சமன்பாட்டு வகைபோல எழுதிக்காட்டுகிறார். அவை இவையே :
அஞ்சாமை + கோழைமை > தனிமை > தன்னலம்
அஞ்சாமை + வீரம் > ஓரளவு பயன்
அஞ்சாமை + அறிவு > செயலாண்மை
'இழப்புகண்டு சோர்வுறாமை' என்ற தலைப்பின் கீழும் இத்தகைய சமன்பாட்டு விளக்கங்களைக் காணலாம்.
உடல்தாக்கம், உள்ளச்சோர்வு, அறிவுத்தளர்ச்சி ஆகியவைபற்றி விளக்கியுள்ள செய்திகள் வேறெந்த தமிழ் நூலிலும் காணற்கரியன.

யார் - என்ன உணவு?
'இடையூறுகண்டு மனந்தளராமை'யில் உடல்நலம் பற்றிய செய்தியில் யார்யார் எவ்வெவ்வுணவை உண்கின்றனர் என்ற செய்தி விளக்கப்பட்டுள்ளது.
சிறந்த அறிஞர்கள் - அறிவுநலந்தரும் உணவையே உண்கின்றனர்.
நன்கு கற்றவர்கள் -உடல்நலத்துக்கான உணவையே உண்கின்றனர்.
ஓரளவுகற்ற பொதுவானவர்கள் - உடல்வலிவுக்கான உணவையே உண்கின்றனர்.
கல்லாதவர்களும் சிறிதே அறிவுள்ளவர்களும் -உடல்தேவைக்கான எந்த
உணவையும் உண்கின்றனர்.
கீழாக அறிவுள்ளவர்கள் - பசிக்காகவே உண்கின்றனர்.
அதனினும் கீழானவர்கள் - ஆசைக்காகவே உண்கின்றனர்.
விலங்குகளும் பறவைகளும் - உண்பதே உயிரியக்கமாகக் கொண்டன.

துணையாளரும் பணியாளரும்
வினைத்திறம் கொண்டவர்கள் (அறிவுணர்வு முதல் நினைவாற்றல் ஈறாக) நாற்பத்தோர் உணர்வுகளில் மிக்கக்கூர்மை உடையவர்களாக இருப்பர் என்றும் இவற்றுள், பெரும்பான்மையும் பொருத்தமாக உள்ள ஒருவரே இருவரே வினைத் துணைவர்களாக முடியும் என்றும் கூறுகிறார்.
மேற்கூறிய நாற்பத்தோர் உணர்வுகளை, அகஉணர்வுக் கூறுகள் அல்லது இயற்கை உணர்வுகள், புறஉணர்வுக் கூறுகள் அல்லது செயற்கை உணர்வுகள், உலகியல் உணர்வுக் கூறுகள் அல்லது செயற்பாட்டு உணர்வுகள் எனப் பிரித்துப் பட்டியலிட்டுள்ளார். இவ்வுணர்வுகளுக்குத் தக்க விளக்கமும் தந்துள்ளார்.
ஒருவரைப் பணியாளராக அமர்த்துவதற்கு முன்னர், அவருடைய பதின்மூன்று வகைக் குணநலன்களில் மிகு கவனம் செலுத்துதல் வேண்டுமெனக் கூறுகிறார். இவற்றுள் மிகுதியும் தகுதியுடையவர்களைத் தேறும்பொழுது, செயலும் மிகு சிறப்புடையதாக இருக்கும் என்கிறார்.
நூலின் இறுதியில், செயல்திறத்திற்கு எடுத்துக்காட்டாக, அமெரிக்காவின் 'உரிமைச்சிலை'யைச் செய்த செயல்திறத்தை விளக்கிக் கூறுகிறார்.

மேற்கோள்கள்
திருக்குறளின் சிறப்பைக் கூறும்போது, அற நூல், வாழ்வியல் நூல், அரசியல் நூல், பொருளியல் நூல், குமுகவியல் நூல், ஒழுக்கநெறி நூல், புரட்சி நூல், இனநல மீட்பு நூல், இன்ப நூல் எனப் பாவலரேறு அதன் பல்வேறு உயர்ச்சிகளை அவருடைய வேறொரு நூலில் விளக்குவார். இந்நூலில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட குறள்களை மேற்கோள் காட்டிச் செய்திகளை விளக்கியிருக்கின்றார். நூல் நெடுகிலும் திருக்குறளைக் கொண்டே மிகப்பெரும்பான்மையான செய்திகளை விளக்கிச் சொல்லியிருக்கின்றார்.
நல்வழி, வாக்குண்டாம், நீதிநெறிவிளக்கம், அகநானூறு, கலித்தொகை, புறநானூறு, பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம், திருமந்திரம் முதலான நூல்களிலிருந்தும் அவர் எழுதிய 'உலகியல் நூறு' நூலிலிருந்தும் மேற்கோள்கள் தந்துள்ளார். இவையும் தவிர, பல்வேறு பழமொழிகளையும் செய்திகளை விளக்கப் பயன்படுத்தியுள்ளார்.

இறுதியாக...
இதுவரையில் இவ்வகையில் தமிழில் வராத அரிய நூலாக இந்நூல் திகழ்கிறது. இது மிகைக் கூற்றோ வெற்றுப் புகழ்ச்சியோ இல்லை என்ற உண்மையை நூலைப்படித்தபின் நன்கு உணரமுடியும். இந்நூலில், அரசியல்சார்புக் கருத்து எதுவும் இல்லை. நாட்டின் சட்டக்கூறுகள் எதற்கும் புறம்பாக உள்ள கருத்து எதுவும் கிடையாது. இந்நிலையில், ஈடெடுப்பற்ற இந்த அறிவுநூலுக்கு இதுவரை எந்தப் பாராட்டோ பரிசோ அளிக்கப்படாத்து, நாட்டின் பரிசளிப்பு முறையில் உள்ள குறைபாட்டையே எடுத்துக் காட்டுகின்றதெனத் துணியலாம்.
இந்நூலை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டுமென்ற பாவலரேறு ஐயாவின் விருப்பம் இன்றுவரை நிறைவேறவில்லை என்பது ஒரு வருத்தந்தரும் செய்தியாகும்.
********************************************************************




ஞாயிறு, 10 பிப்ரவரி, 2008

குறள் வெண்பா

ஈர்க்கும் தமிழ்பேசி ஏய்த்தெத்தி வாழ்ந்திடுவார்             
பார்க்குள் பதராவார் பார்.

பணங்காசின் பித்ததைப் பார்த்தறிந்த பின்னே
இணங்கியுளம் ஏற்றல் இலை.

மூவாற்று நீரும் முழுதும் இழப்பதோ
போவாய் உனக்கேன் பொறுப்பு.

மதவுணர்வு மக்களை மாய்க்கவோ? முற்றும்
மதமதுவும் வேண்டா மறு.

வீழார்; விடுதலைப்போர் வெல்வாரெஞ் செந்தமிழர்
ஈழத் திதுவுறுதி யே!.

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2008

இசைமிக்க சுரும்பியனை இழந்தோம்!


இசையறிஞர் ஆசிரியர் இன்றமிழ்ப்பண் ணாய்வர்!
            எவரையுமே ஈர்க்கின்ற இசையமைக்கும் வல்லார்!
நசைமிக்கார் தமிழிசையை மீட்டுயர்த்த! வாழ்வில்
            நாளெல்லாம் அதற்கெனவே நாடியுழைத் தோய்ந்தார்!
விசைக்குரலிற் பாவேந்தர் பாவெடுத்துப் பாடின்
            வியப்புறுவோம் வீறுறுவோம் விருப்புறுவோம் வினைக்கே!
இசைமிக்க சுரும்பியனை இழந்தோமே! இவர்போல்
            எவருழைப்பார் தமிழிசைக்கே, இரங்கியழும் நெஞ்சே!

புதன், 30 ஜனவரி, 2008

தூயதமிழ் காப்பும் தொடர்புடைய உண்மைகளும்!

          மொழி ஒரு கருத்துப் பரிமாற்றக் கருவி எனக்கூறுவது முழுமையாகக் கூறப்படாத ஒரு விளக்கமாகும். மொழி, அதைப் பேசுகின்ற இனத்தின் அரசியல், கலை, வரலாறு, குமுகநிலை, பழக்கவழக்கம், ஒழுக்க நெறிகள் மற்றும் எண்ணங்கள் போன்ற பல வாழ்வியல் கூறுகளையும் பண்பாட்டு நிலைகளையும் வெளிப்படை விளக்கமாகவும் உள்முகச் செய்திகளாகவும் கொண்டிலங்குகிறது. எல்லாரும் புரிந்து கொள்ளக் கூடியவாறு இக்கருத்தைச் சான் கிரகாம் தம் நூலில் (English word-book) விளக்கிக் கூறுகிறார்.

தமிழ்மொழி உலக முதன்மொழி என்றும் முதற்றாய்மொழி என்றும் கூறும் தேவநேயப் பாவாணர் போலும் அறிஞர்களின் கருத்துக்களை ஏற்கத் தயங்குவோர் இருக்கலாம். ஆனால், தமிழின் தொன்மையையும் தனித்தன்மையையும் மொழியறிஞர்களாகிய கால்டுவெல், இராபர்ட்டு நொமிலி, எல்லிசு, வீரமாமுனிவர், போப், சியார்ச்சு காட்டு போன்ற பலரும் ஐயத்திற்கிடமின்றி ஒப்புகின்றனர். அவர்களின் நடுவுநிலை மதிப்பீடுகள், தமிழ் தனித்தியங்கவல்ல செம்மொழி என்னும் கருத்தை வலியுறுத்துகின்றன.

இனி, தூயதமிழ் அல்லது தனித்தமிழ் என்று குறிப்பிடும் தமிழ் எது? பலரும் கேட்கும் இக்கேள்விக்கு விடை இதுதான் : ஆரியர் இங்கு வருமுன் தமிழ் இயற்கையாக எப்படி வழங்கியதோ அப்படி வழங்குவதே தூயதமிழ். மொழியறிஞர் தேவநேயப் பாவாணர், “தமிழென ஒன்றும் தனித்தமிழென்றும் இருவேறு மொழிகள் இல்லை – தமிழதுதானே தனித்தமிழாகும் தவிர்த்திடின் பிறசொல்லை!” என்பார்.

மிகச் செழிப்பாக வளர்ந்திருந்த தூய இனிய செந்தமிழ், ஆரியரின் வேத மத்ததாலும், சமண, பவுத்த மதங்களாலும் தாக்குண்டு, படிப்படியாய் சீரிழந்தது. அரசியலில் களப்பிரர், பல்லவர் அரசுகள், வடமொழிக்கே ஊக்கம் அளித்துப் போற்றிப் புரந்தன. மாற்றார் ஆட்சியில், மொழி்யுணர்வும் வரலாற்றறிவும் தமிழரிடை முற்றும் மறைந்த காலத்து, தமிழ்மொழியைக் கெடுத்துப் பெருமை குன்றச் செய்யவேண்டு மென்றக் கரவான உள்நோக்கத்தோடு தமிழில் பிறமொழிச்சொற் கலப்பு நடந்தது. தமிழரின் வழிப்பின்மையும் நாணாமை நாடாமை நாரின்மை பேணாமையும் அதற்கு வசதியாக அமைந்தது. பின்பு, அரபியர், பார்சியர், சீனர், போர்ச்சுக்கீசியர், ஆங்கிலேயர் தொடர்பால் தமிழ் மேன்மேலும் கலப்புற்றது.

மொழிக்கலப்பு தமிழின் வளர்ச்சியைத் தடுத்தது. மொழிக்கலப்பும் ஒலிக்கலப்பும் தமிழினின்று மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளுவம், குடகம், துடவம், கோத்தம், கோண்டி, கொண்டா, கூய், ஒராஒன், இராசமகால், பிராகுவி, குருக்கு, குவீ, பர்சீ, கடபம், மாலத்தோ, நாய்க்கீ, கோலாமி முதலிய மொழிகள் பிரிந்து வழங்க வழிவகுத்தன. இதனால், மக்களும் பிரிந்தனர்.

தமிழிற் கலந்துள்ள பிறமொழிச்சொற்கள் தமிழர் தாமாக விரும்பிக் கடன் கொண்டவையல்ல. வளமிக்க தமிழ்மொழிக்குச் சொற்கடன் தேவையுமில்லை. மொழியறிஞர் எமினொ போன்ற பிறநாட்டு அறிஞர்கள் பலரும் தமிழின் வேர்ச்சொல் வளம் ஈடற்றதென்றுரைப்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். தமிழில் வலிந்து பிறமொழிக் கலப்பைத் தொடர்ந்து வருகின்ற சில எழுத்தாளர்கள் நடைமுறையில் – வழக்கில் – உள்ள எளிய தமிழ்ச்சொற்களையும் புறக்கணித்து வீம்புக்காகவும் உள்நோக்கத்தோடும் அயல்மொழிச் சொற்களை கலந்தெழுதிக் குழப்பி வருகின்றனர்.

வடமொழி தேவமொழி என்றும் அம் மொழியையும் அதன் சொற்களையும் வழங்குவது இறைவனும் விரும்பும் ஏற்றம் என்றும் தவறான கருத்து வலிவாகப் பரப்பப் பட்டதால் வரைதுறையின்றி வடமொழிச் சொற்களை எவ்வகை எதிர்ப்புமின்றிக் கண்டமண்டலமாகத் தமிழில் கலந்தெழுதும் நிலையேற்பட்டது. இந்நிலையால், தமிழினுடைய தூய்மையும் வளமுங் கெடவும் பெரும்பேரளவிலான தமிழ்ச் சொற்கள் பொருளிழக்கவும் வழக்கொழியவும் நேர்ந்தது.

நன்றாக எளிதில் புரியக்கூடிய பொருத்தமான தமிழ்ச்சொற்களை விலக்கி, அரிதான, விளங்காத, சரியாகப் பொருந்தாத வடசொற்கள் வலிய திணித்துக் கலக்கப்பட்டதற்கான சில சான்றுகளைப் பாருங்கள் :

வலிந்து திணித்த வடசொற்கள் / வழக்கு வீழ்த்தப்பட்ட தமிழ்ச்சொற்கள்

தர்மம் /அறம்
கருணை /அருள்
நீதி /நயன்
தராசு /துலை
அங்கம் /உறுப்பு
யாகம் /வேள்வி
சந்தேகம் /ஐயம், ஐயுறவு
பயம்/ அச்சம்
தேகம் /யாக்கை, உடம்பு
சந்தோஷம், ஆனந்தம், குதூகலம் /மகிழ்ச்சி, உவகை, களிப்பு, இன்பம்
உத்தியோகம்/ அலுவல்
மைத்துனன், மச்சான்/ அளியன்
புதன்/ அறிவன்
சங்கீதம்/ இசை
ராகம்/ பண்
ஆச்சரியம /வியப்பு
அமாவாசை /` காருவா
பௌர்ணமி /வெள்ளுவா
விருத்தாசம்/ பழமலை, முதுகுன்றம்
பிருகதீசுவரர் /பெருவுடையார்
பாதாதிகேசபரியந்தம் /அடிமுதல்முடிவரை
பஞ்சேந்திரியம்/ஐம்புலன்
துவஜாரோகணம் /கொடியேற்றம்
ஹாஸ்யரசம் /நகைச்சுவை
குலஸ்திரீபுருஷபாலவிருத்த ஆயவ்ய்ய பரிமாண பத்திரிக்கை /குடிமதிப்பு அறிக்கை (census report)
ஜன்னல் /பலகணி, காலதர், சாளரம், காற்றுவாரி

இப்பட்டியலை முடிக்கத் தனிநூலே தேவை.

பொய்யொடு கலந்த மெய்யும் பொய்யாகத் தோன்றுவதுபோல, வடசொற்களோடு கலந்த பல தமிழ்ச் சொற்களும் வடசொற்களாகக் கருதப்படுகின்றன.

வலிந்த மொழிக்கலப்பு செய்தபோதே, தமிழ்மொழியையும் தமிழ்ச் சொற்களையும் இழிவுறுத்தும் கொடுமையும் நடந்தது. தமிழை இழிவுபடுத்தினாலே போதும், தமிழர் இழிந்தவராகி விடுவர் என்ற உள்நோக்கத்துடன் இச்செயல்கள் நடந்தன. ‘சோறு’ என்பது தாழ்வென்றும், ‘சாதம்’ என்பது உயர்வென்றும், ‘நீர்’ என்பது இழிவென்றும் ‘ஜலம்’ என்பது உயர்வென்றும் மிகவலிந்த கருத்துத் திணிப்புப் பல்வேறு வகைகளில் நடைபெற்று வந்தது. இப்போக்கு இப்போதும்கூடச் சில இடங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

வடசொற் கலப்பால் தமிழரின் மொழியுணர்வு மரத்துப் போனதால் புதிது புதிதாய் ஆங்கிலம் உருது முதலான பிறமொழிச் சொற்கள் தடையின்றிக் கலந்து தமிழைச் சிதைக்கின்றன. தேவையின்றி வேற்றுச் சொற்களை ஏற்றுக்கொண்டே போவதால், தமிழ் பன்மொழிக் கலவையாக மாற நேர்கிறது. தமிழர் அடையாளமற்ற, வரலாறற்றக் குடியாக மாறும் பெருங்கேட்டிற்கு வழிசெய்கிறது.

பிறமொழிகளிலுள்ள அரிய நூல்களை மொழிபெயர்ப்பதே தமிழை வளப்படுத்தச் சிறந்தவழி. அவ்வாறன்றிப் பிறமொழிச் சொற்களைத் தமிழில் கலப்பது தமிழை அடையாளந் தெரியாத மொழியாக்கி அழித்தொழிக்க முயலும் செயலாகும்.

தமிழ மன்னர் எதெதில் வலுவற்றவராக இருந்தாரோ அததைப் பயன்படுத்தி அவர்களைச் செயல்திறமற்றவராக்கி, அதிகார நிலையைக் கைக்கொண்டவர்கள், நுண்ணுத்தியோடு தீண்டாமை உள்ளிட்ட சாதி வேறுபாட்டுக் கொடுமை இழிவுகளை தமிழ்மக்களிடம் கடுங் கரவுணர்வோடு புகுத்தினர். மேற்கத்திய அறிஞர் எட்கர் தர்சுட்டன் தம் நூலில் (castes and tribes of southern India) இக்கொடுமைகளைப் பதிவு செய்துள்ளார். இப்படிப்பட்ட கொடுமைகளிலிருந்து கொஞ்சம்கொஞ்சமாக மீண்டுவரும் முயற்சியும் தமிழின் தூய்மையைக் காக்கும் முயற்சியும் ஓரளவு ஒப்புமை உடையனவாம்.

முன்னோர் ஆக்கிய மொழியை வளப்படுத்தற்குப் பின்னோரும் புதுச்சொற்கள் ஆக்குதல் வேண்டும். வளர்ந்துவரும் அறிவியல்துறைச் சொற்களுக்கான கலைச்சொற்களை தமிழியல்புக்கேற்பப் புத்தாக்கம் செய்வது இயலாதெனக் கூறி அச்சொற்களை அப்படியே ஏற்றுக் கொள்ளலாமெனச் சிலர் கூறுகின்றனர்! அன்றன்று தோன்றும் புதுப்புது கருத்துகட்கும் புதிதுபுதிதாக வரும் நூல்களில் காணப்பெறும் பல்வேறு அறிவியல் துறைகளின் சொற்களுக்கும் உடனுக்குடன் தமிழ்க் கலைச்சொற்கள் அமைக்கப் பெறல் வேண்டும்.

பிரான்சு, கொரியா, உருசியா, சப்பான், சீனா போன்ற நாடுகளில் அவர்கள் மொழியில் நடைபெறும் இப்படிப்பட்ட வேலைகள் தமிழ்மொழியில் மேற்கொள்ளப் படவில்லை. இந்நிலையில், தமிழிலுள்ள பல அரிய சொற்களை வழக்கு வீழ்த்தும் பணியும் மிகக் கரவாக நடந்து வருகிறது. என்றாலும், இதுவரையில் தமிழில் முயற்சிகளே நடக்காமலுமில்லை! நடந்துள்ள முயற்சிகளைச் சீர்செய்து இனி செய்ய வேண்டியவற்றிற்கு முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். இப்பணிகளை மேற்கொள்ளாமல், பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கண்டுபிடிக்கச் சோம்பற்பட்டவர் பக்கத்திலுள்ள சிற்றப்பன் வீட்டில் மாப்பிள்ளை தேடியது போன்ற வழியைக் கூறுவதா?

இன்றுங்கூட - தமிழ்வழிக் கல்வியை முறையாக நடைமுறைப் படுத்துவதோடு தமிழ்வழியில் படித்தோர்க்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்னும் நிலைவந்தால், புதிதுபுதிதான அறிவியல் கலைச்சொற்களோடு மளமளவென நூல்கள் எழுதிக் குவிக்கப்படும்! தமிழ்ப் பாடநூல் நிறுவனம் முன்பு ஓரளவு செய்ததைச் சான்றாகக் கொள்ளலாம். சீரோடு அவற்றைச் செப்பம் செய்து, அவற்றின் துணையோடு சிறந்த கல்வியைத் தாய்மொழி வழியே தரமுடியும்.

வழக்கற்று, கிட்டத்தட்ட அழிந்தேபோன நிலையிலிருந்த தம் தாய்மொழி எபிரேயத்தை மீட்டெடுத்துச் செப்பம்செய்து, அம்மொழிவழியே கல்விகற்றுப் பலதுறைகளிலும் முன்னேறி வாழ்ந்துவரும் யூதர்களின் மொழிநிலையிலான முயற்சியை நினைத்துப் பார்க்கத் தவறுகிறார்கள், வசதியாக!

எம்மொழியிலும் எல்லாமொழி ஒலிப்புகளும் இல்லை. சீன எழுத்தின் ஒலிப்பு வேறு எந்த மொழியிலுள்ளது? ஒருமொழி தன் இயல்பிற் கேற்காத ஒலிகளை ஏற்பின், நாளடைவில் அது சிதைந்து வேறொரு மொழியாகிவிடும். தமிழ் என்பதை ‘டாமில், டமில், டாமிள், தமில், தமிள், தமிஷ், தமிஸ்’ - என்றெல்லாம் தானே ஆங்கிலத்தில் எழுதுகின்றனர்! பலுக்குகின்றனர்! ஆங்கிலம் ஏன் ‘ழ’ என்னும் தமிழ் எழுத்தை ஏற்கக்கூடாது என்று கேட்பதா?

தமிழர் பேச்சில் பலசொற்றொடர்கள் ஈறுதவிர முற்றும் சமற்கிருதமாகவும் ஆங்கிலமாகவும் மாறிவருகின்றன. இந்நிலை, எழுதும்போதும் – வரிவடிவிலும் – தொடர்கிறது. பிரஞ்சு மொழி வெளியீடுகளில் தேவையற்றுப் பயன்படுத்தப்படும் ஒவ்வோர் ஆங்கிலச் சொல்லுக்கும் 2 ‘பிரான்’ தண்டம் கட்டச் செய்யும் சட்டத்துக்குப் பிரான்சு நாட்டின் தலைவராயிருந்த தெ கால் வழிசெய்ததாகச் செய்தியொன்று உண்டு. இப்படிப்பட்டக் கட்டுப்பாடுகள் சீனத்திலும் உண்டென அறிகிறோம். மொழி வளர்ச்சிக்கு முதல்தேவை அதன் மொழிக்கலப்பற்ற தன்மையைப் பேணிக் காப்பதே!

பிரான்சு, கொரியா, உருசியா, சப்பான் போன்ற நாடுகளில் அவரவர் தாய்மொழியன்றிப் பிறமொழி அறியா அறிவியலறிஞர், ஆய்வறிஞர் செயற்பாடுகளைக் குறைகூறத் துணிவார்களா? புதிதுபுதிதாக வரும் நூல்களை உடனுக்குடன் மொழிபெயர்க்க அங்குள்ள ஏற்பாடுகளைப்போல், இங்கு எந்த ஏற்பாடும் செய்யப்படாதது அன்றோ குறை!

இன்னுஞ் சிலர், தம் ‘இடைப்பட்ட’ ஆராய்ச்சியால் ‘பகல்’, ‘இரவு’ மொழிகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். பிறமொழிச் சொற்களை ‘ஆக்கிரமிப்பு’ச் சொற்கள் என்றும் வளமாக்கும் சொற்கள் என்றும் பிரித்து முதல்வகையை மட்டுமே தவிர்க்கலாம் என்கிறார்கள்! அதாவது, ‘டெலிபோன், டி.வி., கம்பியூட்டர்’ மட்டும் வேண்டாவாம்! ஆனால், ‘ஜாங்கிரி’, ‘ஜிலேபி’, ‘அல்வா’ அப்படியே வேண்டுமாம்! இப்படி வேறுபடுத்துதற்கான அளவுகோலை, அன்பு செலுத்துதற்கு அவர்கள் அளவுகோல் கண்டுபிடித்துள்ளதைப் போல, இதற்கும் கண்டுபிடித்துள்ளார்களாம்!

சில ‘மிகுமேலறிவுப் பெரும்பெரிய’ எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், சப்பானியர்கள் அவர்கள் மொழியிலேயே பயில்கிறார்கள் என்று வானளாவப் புகழ்கிறார்கள். ஆனால், தமிழர்கள் தமிழ்வழியிலேயேப் படிக்க வேண்டும் என்றால் இவர்களுக்கு அருவருப்புத் தோன்றிவிடும்! தாய்நாடு என்றால் தலையாட்டுவார்கள்! தாய்மொழி என்றாலோ தமிழ்த்தாய் என்றாலோ இவர்களுக்கு உடலெங்கும் எரிச்சல் கண்டுவிடும்! இவர்கள் இலக்கணப்படி, பிறமொழிகலவாது எழுதப்படும் பா, பாவே (அவர்கள் கூற்றில் ‘கவிதையே’) அன்று!

நாட்டையும் மொழியையும் உலகமே தாயாகக் கருதுகிறது. ஆனால்,தாய்மொழிப் பற்றும், தாய்நாட்டுப் பற்றும் இவர்களுக்குக் காமமாகத் தெரியும்!. பாரதியைப் போற்றிப் புகழ்ந்து தள்ளுவார்கள். அந்தக் காலத்திலேயே பாரதி, இயனறவரை தமிழில் பேசவேண்டும் என்று சொன்னதையும் பாடங்கள் அனைத்தும் தமிழிலேயே கற்பிக்கப்படவேண்டும் என்று சொன்னதையும் கண்டுகொள்ள மாட்டார்கள்!

ஒருமுறை, தமிழ்க்காப்புக்கென சிறு முயற்சியாக ஊர்வலம் செல்ல முனைந்தவர்கள், இப்படிப்பட்ட ‘பெரும்பெரிய எழுத்தாளர்’ ஒருவரை அழைத்தபோது அவர், “டோன்ட் ஒர்ரி, டமில் வில் லிவ் பார் எவர்” எனத் திருவாய் மலர்ந்துத் தம் ஆங்கிலப் புலமையை வெளிப்படுத்தியிருக்கின்றார்!

இவர்கள் எழுதும் சில சொற்றொடர்களைப் பாருங்கள்-

‘மிஸ் தமிழ்த்தாய்க்கு நமஸ்காரம்’,
‘நல்ல கவிதை என்றால் தனித்தமிழில் இருக்கக்கூடாது’,
‘தமிழ்ப்பற்று பொருந்தாக் காமம்’,
‘தமிழ்ப்பற்று தற்கொலைக்குச் சமம்’ .....

ஆழ்மனத்தின் அருவருப்பான நிலைகளும் பொறுத்துக் கொள்ள இயலாக் காழ்ப்பின் பொருமலும் எரிச்சலும் தானே இவ்வாறு வெளிப்படுகின்றன!

தமிழ்மீது ‘அக்கறை’யுள்ளதாகச் சொல்லிக் கொள்ளும் இப்போலிகள் தங்குதடை தயக்கமின்றிப் பிறமொழிச் சொற்களைக் கலந்தெழுதுவதை ஒட்டாரமாகச் செய்துவருகிறார்கள். தூயதமிழ் பேணும் முயற்சி செல்லாக் காசாகிப் போனதென்றும் அப்படி முயன்றோர் காலச்சுழியில் காணாமல் போய்விட்டார்கள் என்றும் எழுதி மகிழ்ந்து கொள்கிறார்கள்! முழுப்பூசணிக் காயைச் சோற்றில் மறைக்க முயலுகிறார்கள்!

நிறைதமிழ் மலையாம் மறைமலையடிகள் தூயதமிழ்பேணும் முயற்சி தொடங்கியபோது எழுதப்பட்டுவந்த தமிழ்நடைக்கும் தொண்ணூறாண்டுகளுக்குப் பிறகு இப்போது பொதுவாக எழுதப்படும் தமிழ்நடைக்கும் உள்ள வேறுபாடே அம்முயற்சி கண்டுள்ள குறிப்பிடத்தக்க வெற்றியை அவர்களுக்கு விளக்கிக் கூறும். நூற்றுக் கணக்கான வழக்கு வீழ்த்தப்பட்ட சொற்கள் மீடகப்பட்டுப் பயன்படுத்தப் படுவதையும், பல்லாயிரக் கணக்கான சொற்கள், குறிப்பாகப் பல்வேறு அறிவியல்துறைக் கலைச்சொற்கள் புத்தாக்கம் செய்யப்பட்டுப் பயன்படுத்தப் படுவதையும் அவர்கள் அறிய விரும்புவதில்லை!

தாய்மொழிக் காப்புணர்வுடன் தமிழர்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான இம் முயற்சியால், அரசுதுறையிலும் பொதுமக்களிடத்திலும் ஆசிரியர் மாணவரிடையிலும் இதழ்களிலும் சிறிதேனும் நல்லதமிழ் காணப்படுவதை ஒப்பத்தானே வேண்டும்!

கீழ்க்காணும் வரிகள் 1920-இல் ஒரு தமிழ்ப் பாவலர் ‘தேசியக்கல்வி’ என்ற கட்டுரையில் எழுதியவை.

“தமிழ்நாட்டில் தேசியக்கல்வி நடைபெற வேண்டுமாயின் அதற்கு அகரமுதல் னகரப்புள்ளி இறுதியாக எல்லா வ்யவஹாரங்களும் தமிழ்பாஷையில் நடத்த வேண்டும் என்பது பொருள்.
ஆரம்ப விளம்பரம் தமிழில் ப்ரசுரம் செய்ய வேண்டும். பாடசாலைகள் ஸ்தாபிக்கப்பட்டால் அங்கு நூல்களெல்லாம் தமிழ்மொழி வாயிலாகக் கற்பிக்கப் படுவதுமன்றிப் பலகைக் குச்சி எல்லாவற்றுக்கும் தமிழிலே பெயர் சொல்லவேண்டும். ‘ஸ்லேட்’, ‘பென்சில்’ என்று சொல்லக்கூடாது. .............................................................
மெம்பர் என்பதற்குச் சரியான தமிழ்ச்சொல் எனக்கு அகப்படவில்லை. இது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். ‘அவயவி’ சரியான வார்த்தை இல்லை. ‘அங்கத்தான்’ கட்டிவராது. ‘சபிகன் சரியான பதந்தான். ஆனால், பொதுமக்களுக்குத் தெரியாது. யாரேனும் பண்டிதர்கள் நல்ல பதங்கள் கண்டுபிடித்துக் கொடுத்தால் புண்ணியமுண்டு. அரைமணி நேரம் யோசித்துப்பார்த்தேன். ‘உறுப்பாளி’ ஏதெல்லாமோ நினைத்தேன். ஒன்றும் மனத்திற்குப் பொருந்தவில்லை, என்னசெய்வேன். கடைசியாக ‘மெம்பர்’ என்று எழுதிவிட்டேன். இன்னும் ஆர அமர யோசித்துப் பார்த்துச் சரியான பதங்கள் கண்டுபிடித்து மற்றொருமுறை சொல்லுகிறேன். .........
தமிழ்நாட்டில் முழுதும் தமிழ்நடையை விட்டு இங்கிலீஷ் நடையில் தமிழை எழுதும் விநோதமான பழக்கம் நம் பத்திராதிபர்களிடம் காணப் படுகிறது.”

மேலே கண்ட பகுதியை எழுதியவர் பாவலர் சுப்பிரமணிய பாரதியே!

இப்படிப்பட்ட மணிப்பவள நடையை இப்பொழுது ஒருவர் எழுதினால், அவர், தமிழ்மொழியில் வேண்டுமென்றே வீம்புக்காக வடசொற்களைக் கலந்து எழுதுகிறார் என்று கூறுமளவிற்கு இன்றைக்குத் தூயதமிழ் பேணும் முயற்சி முன்னேற்றம் கண்டுள்ளதெனக் கூறலாம்.

முழுமையான வெற்றிபெற இன்னும் தொலைவு உள்ளதென்பது உண்மை. ஆனால், தூயதமிழ் பேணும் முயற்சியே தமிழ்மொழியைக் காக்கும் என்பதும் தமிழை வளர்த்தெடுத் துயர்த்த இன்றியமையாத தென்பதும் உறுதியாகும். தூயதமிழ் காக்கும் முயற்சி மட்டும் இல்லாதிருந்தால், இருபதாம் நூற்றாண்டில் இன்னுமொரு மலையாளம் தோன்றியிருக்கும்! சில கோடித்தமிழர்கள் இன்னொருவகை மொழியினத்தவராக மாறியிருப்பர் என்றால் மிகையுரையன்று, உண்மையே!

பிறமொழிக் கலப்பால் தமிழ்வளமும் தமிழரின் நலமும் கேடுற்றுள்ளது; தமிழர் வாழ்வியலும் பண்பாட்டுக் கூறுகளும் சிதைவுற்றுவிட்டன. தூயதமிழைக் காப்பது தமிழரின் நலன்களில் கருத்துச் செலுத்துவதாகும்! தமிழின், தமிழரின் மீட்சிக்கும் மறுமலர்ச்சிக்கும் பாடுபடுவதாகும்!

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
 
-----------------------------------------------------------------------------------------
நன்றியுரைப்பு :-
மறைமலையடிகளார்,
மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர்,
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோர்க்கும்
ஏனைத் தமிழ்மீட்சி முயற்சியாளர்க்கும் நெஞ்சார்ந்த நன்றி!
-----------------------------------------------------------------------------------------

வியாழன், 10 ஜனவரி, 2008

'தினமணி' நாளிதழுக்கு...!


அனுபுள்ள ஆசிரியருக்கு...
ஐயா, வணக்கம்.
            இன்று, 10-01-2008 மாலை 06-55 மணியிலிருந்து 07-00 மணிக்குள்ளாக (மாலை 07-00 மணி செய்திகளுக்கு முன்னால்) அரசுத் தொலைக்காட்சி யான பொதிகையில், பாரதியாரின் தமிழ்த்தாய்பாடலை ஒளி/ஒலி பரப்புகையில் மெல்லத் தமிழ் இனி சாகும்என்பதோடு நின்றுவிட்டது. சிறிதுநேர இடைவெளிவிட்டு மெல்லத் தமிழ் இனி சாகும்என்ற நான்கு சொற்களை மட்டும் மீண்டும் கூறியதை நானும் நண்பர்களும் கேட்டோம். இரண்டாம் முறையும் அந்த நான்கு சொற்களுக்கு மேல் வேறு எதுவும் தொடர்ந்து பாடவில்லை. வேறு அறிவிப்புகளும் இல்லை.
            இச் செயல், வேண்டுமென்றே தமிழ்மக்களின் மொழிஉணர்வோடு விளையாடும் செயலாகத் தெரிந்தது. இதைக் கவனித்த எம் புதுவை நண்பர்களும் தொலைபேசிவழி தொடர்புகொண்டு, ‘இச் செயல் தமிழுக்கு எதிராக வேண்டுமென்றே செய்யப்பட்டுள்ளதுஎனக்கூறி அவர்களின் மனக்கொதிப்பை வெளிப்படுத்தினர்.
            அரசுத் தொலைக்காட்சியில் மக்களின் வரிப்பணத்தில் தமிழுக்கு எதிராகக் குறும்பாக நடந்துகொள்வது தமிழ்மக்களுக்கு நெஞ்சக் கொதிப்பையும், அளவற்ற வருத்தத்தையும் கொடுக்கும் செயலாக உள்ளது. எம் நண்பர், தொலைக்காட்சி நிலையத்தைத் தொடர்புகொண்டு இதைப்பற்றிக் கேட்டதற்கு எவரும் பொறுப்பாக விடைதரவில்லை.
            துஞ்சு புலி இடறிய சிதடனின்கதையாக நடந்துள்ள இச் செயல் குறித்துத் தொடர்புடைய அதிகாரிகள் தக்க விளக்கமளித்து, விரும்பத்தாத விளைவுகளைத் தவிர்க்கவேண்டும். இனி எப்போதும் இப்படி நிகழாதிருக்க உறுதியளிக்க வேண்டும்.
            - தமிழநம்பி, விழுப்புரம்.

சனி, 29 டிசம்பர், 2007

தாய்த்தமிழ் நாட்டினனே......!


சிங்களவன் கொன்றழிக்க சிங்கை மலேசியம்மற்
றெங்கும் இழிவின்னா எவ்வமுற இங்கேநீ
முங்கி முயங்கித் திரி.

ஞாயிறு, 23 டிசம்பர், 2007

திருக்குறளில் மூன்றுகுறள்கள்

            திருக்குறளைப்பற்றி இரவரெண்டு பர்சிவெல் என்னும் மேற்கத்திய அறிவர் 'இதற்குச்சமமாகிய நூல் மக்களாய்ப்பிறந்தோர் பேசும் வேறு எம்மொழியிலும் காணமுடியாது' என்பார்.                                                                             'எல்லாப்பொருளும் இதன்பால் உள; இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லை' என்பார் மதுரைத் தமிழ்நாகனார். திருக்குறளில் எல்லாக்குறள்களுமே வாழ்வாங்கு வாழ வழிகூறும் ஈடு எடுப்பற்ற அறிவு வெளிப்பாடுகள் தாம்! மாந்தரை நெறிப்படுத்தும் வழிகாட்டிகளே! வாழ்வின் உண்மையான இன்பநுகர்ச்சியை எடுத்துரைக்கும் பட்டறிவுப் புதையல்களே! ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏதாவது ஒன்றிரண்டு குறள்களேனும் நேரடிநாகவோ மறைமுகமாகவோ ஏதேனும் ஒருவகையிலேனும் தாக்கத்தை உண்டாக்கியிருக்கக்கூடும். அவ்வகையில், தமிழர் பெரும்பாலரை வழிநடத்திப் பெருமிதம் கொள்ளச்செய்திருக்கும் மூன்று குறள்களை, -அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் முப்பால்களில் ஒவ்வொனுறிலும் ஒவ்வொரு குறளை- இப்போது காண்போம்.                                                                        

1.     ஒத்த தறிவா னுயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும். - குறள்214.

இக்குறள் அறத்துப்பாலில் ஒப்புரவறிதல் அதிகாரத்தில் நான்காம் குறளாகும். இதன் பொருள் :
மாந்தராய்ப்பிறந்தவர் அனைவரும் ஒப்பானவர், சமமானவர், ஒத்தவர் என்பதை அறிகின்றவனே உயிர்வாழ்கின்றவன் ஆவான். மற்றையான் செத்தாருள் ஒருவனாக - நடைப்பிணமாக - வைத்து எண்ணப்படும் என்பதாகும்.
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று 972-ஆம் குறளிலும் வள்ளுவர் வலியுறுத்துகிறார். எல்லா உயிர்களும் சமமானவை என்று அறியாதவன் நடைப்பிணமாகக் கருதப்படுவதால், அஃறிணையைக் குறிப்பிடுவதைப் போல 'செத்தாருள் வைக்கப்படும்! ' என்று கூறுகிறார். உரையாசிரியர் மணக்குடவரும் 'பெருமை குலத்தினால் அறியப்படாது' என வள்ளுவர் கூறுவதாக தெளிவிக்கிறார்.
'பெருமையும் சிறுமையும் தான்தர வருமே' என்று 'வெற்றிவேற்கை'யும் கூறும். 'ஆக்கும் அறிவினல்லது பிறப்பினால் மீக்கொள் உயர்விழிவு வேண்டற்க’ என நன்னெறியும் நவிலும்.
தந்தை பெரியார், பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் பெருங் கொடுமையைத் தம் வாணாள் முழுமையுங் கடுமையாக எதிர்த்துவந்ததோடு அதுகுறித்த அறிவையும் உணர்வையும் ஊட்டி, மாந்தருக்குள் வேறுபாடு கற்பித்தக் கயமையையும் கடுமையாகச் சாடிவந்ததைத் தமிழர் நன்கறிவர். பிறப்பிலேயே உயர்வு தாழ்வெனறு மாந்தரைக் கூறுபோடும் ஆரிய வேதங்களும் ‘மனுதர்மம்’ முதலான மாந்தநேயமற்ற, ஒருசாரார் உயர்வுக்கே எழுதப்பெற்ற நூல்களும், இக்காலத்தும் நயன்மை உணர்வற்ற கரவான கழிமிகு தன்னலப் போக்கரால் உயர்த்திப் பிடிக்கப்படுவதையும் நடுவுநிலை நன்னெஞ்சர் விளக்கி வருகின்றனர்.
இவ்வகைக்கொடிய நிலைகளைக் கண்டறிகிறபோதெல்லாம், -காரறிவாளர் மிகத் திறமையாகத் திணித்த சாதியால் கூறு பட்ட தமிழர்கள் தமக்குள்ளேயே தாக்கிக்கொண்டு அழிகின்ற இழிவைக் காணும்போதெல்லாம் - இக் குறள் கூறும் உண்மையைத் தமிழர்களே உணர்ந்துதெளிந்திடாமை நெஞ்சைப் புண்ணாக்கி நோவுறுத்துவதாக இருந்துவருகிறது.
2.     புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து. குறள் 780.                                                                        இக் குறள் பொருட்பாலில் படைச்செருக்கு அதிகாரத்தில் பத்தாம் குறளாகும். புரத்தல் என்றால் காத்தல், நிலைபெறுத்தல் என்று பொருள். புரந்தார் என்பவர் காத்தவர், நிலைபெறச் செய்தவர் ஆவார். புரந்தார் முற்காலத்தில் பெற்றோராகவோ, அரசராகவோ, வேறு சான்ன்றோராகவோ இருந்திருக்கலாம்; இக்காலத்தில் பெற்றோராகவோ வேறு உறவினராகவோ நடுவுநிலை சான்ற அறிஞராகவோ பிறராகவோ இருக்கக்கூடும்.
‘தம்மைப் பெரிதும் அன்பருளோடு ஓம்பிப் பாதுகாத்தவரும் நிலைபெறச் செய்தவருமாகியவர் கண்ணீர் பெருகிச் சொரிந்து அழுகின்ற வகையில், உயர்ந்த ஓர் நோக்கத்திற்கான செயற்பாட்டின் பொருட்டுச் சாகப்பெறின், அச்சாவு இரந்தாயினும் பெற்றுக்கொள்ளும் சிறப்புடையது’ – என்பதே இக்குறளின் பொருளாகும்.
இரத்தலைவிட இழிவானது வேறில்லை. ‘ஈ என இரத்தல் இழிந்தன்று’ எனப் புறநானூறு கூறும் (204). ‘ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்ததில்’ (கு.1066) எனப் பிறிதோரிடத்தில், மானம்தீர வரும் இரப்பிற்கு அஞ்சிடக் கூறிய திருவள்ளுவப் பேராசான், புறனடையாக, அத்தகைய மானம்தீர வரும் இரப்பும் புரந்தார் கண் நீர்மல்க இறப்பதற்காக இரப்பதாயின், தகுதியானதே என்று தெளியக் கூறுகிறார்.
பொதுவான சாவாக இருந்தால், உறவினரும் நண்பரும் மட்டுமே வருந்தி அழுவர். தாய்நாட்டிற்காகவோ, தாய்மொழிகாக்கவோ, தாம்பிறந்த குடிநலன் காக்கவோ - மக்களினத்தின் நலத்திற்காக, இணையற்ற உயர்ந்த புகழ்விளைக்கும் செயற்பாட்டில் உயிர் துறக்கின்றவர், மக்கள் பலவாறு பாராட்டிப் போற்ற, நினைவுச்சின்னமாக நிலைத்திருப்பர். சிறந்த பெருமையையும் பயனையும் விளைக்கும் அவ் உயிர்துறப்பு இரந்தாயினும் கொள்ளத்தக்கது என்பதே நுண்ணறிவுத் தெள்ளியர் வள்ளுவனாரின் தேர்வுரையாகும்.
தாய்மொழியைக் காப்பதற்காகத் தம் இன்னுயிரையும் ஈந்த ஈகமறவர்களின் உயிரிழப்புகளும், இனப்படுகொலைகளை எதிர்த்துப் போர் புரிந்துவரும் தமிழீழ விடுதலை மறவர் மறத்தியரின் வீரச்சாவுகளும் இக்குறளை என்றென்றும் நினைவில் நிலைக்கச்செய்துவிட்டன.                                                                                            
3.     தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு. குறள் 1107.                                                                                  இது, காமத்துப்பாலில், புணர்ச்சிமகிழ்தல் அதிகாரத்தில் ஏழாம் குறளாகும். இக்குறளின் பொருள் : அழகும் ஒளிறும் மாநிறமும் பெற்ற அருமை நிறைந்த காதலியொடு கொள்ளும் புணர்ச்சித்தழுவல்,- தமக்குச்சொந்தமான உரிமை இல்லத்தில் இருந்துகொண்டு, தம்முடையசொந்த முயற்சியால் முறையாக ஈட்டிய வருவாயைக்கொண்டு சமைத்து உருவாக்கப்பட்ட உணவைத், தாமும் விருந்தினருமாக, நிறைவாரப் பகுத்துஉண்டு மகிழும்போது ஏற்படும் உரிமையும் பெருமிதச் செம்மாப்பும் கொண்ட, மனம் நிறைந்தெழும் இன்பநிலைக்கு நேர் இணையானது - என்பதாகும்.                                                         ஈண்டுத் திருவள்ளுவப் பெருந்தகை வேறுசில இடங்களில் கூறியிருக்கும் கீழ்க்காணும் கருத்துக்களும் ஒப்புநோக்கத்தக்கன.                                                                    * முயற்சிசெய்து ஈட்டியபொருள் முழுவதும் தகுதியுடையார்க்கு உதவி செய்வதற்கே ஆகும் – (கு.212)                                                                                                               * முறையான முயற்சியால் கிடைத்தது தெளிந்த நீர் போன்ற கூழே ஆயினும் அதனை உண்பதைவிட இனிமையானது வேறில்லை – (கு.1065)                                       * எப்போதும் பலரோடும் பகுத்து உண்ணும் பழக்கம் உடையவனைப் பசி என்னும் தீயநோய் அணுகாது. – (கு.227)                                                                                          * கிடைத்த உணவை இயன்றவரைப் பசித்த உயிர்கட்குப் பகுத்துக் கொடுத்துத் தானும்உண்டுப் பலவகை உயிர்களையும் பாதுகாத்தல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றினும் தலையான அறமாகும். – (கு.322)
           இவற்றுடன், ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்னும் புறநானூற்று வரியும் (பு.17), மணிமேகலை வரியும் (மணி.1255) ஒப்புநோக்கத் தக்கனவாம். மாந்தர் வாழ்வில் மிகஉயர்ந்த இனிமையை, இன்பநிலையைப் பகுத்துண்டு மகிழும்போது ஏற்படும் உரிமையும் பெருமிதச் செம்மாப்பும் கொண்ட, மனம் நிறைந்தெழும் இன்பநிலைக்கு நேர் எனக்கூறும் இக்குறளைப் படித்தறியும்போது, ஈடிணையற்ற நாகரிகம் பண்பாடு கொண்ட சான்றாண்மையராக முன்னோர் இருந்திருக்கின்றனர் என்ற எண்ணத்தால் நெஞ்சம் பெருமையால் இருமாந்து பூரிக்கும். ஆனால், அதேபோழ்தில், இன்றுள்ள தமிழரோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், ஆற்றொணாக் கவலைகள் நெஞ்சை அழுத்தும். இவை அடிக்கடி நிகழும்.                                                             **************************************************************************                                                                                                                         உதவிய நூல்கள் :                                                                                                                                              1. பரிமேலழகர், மணக்குடவர், காலிங்கர், பரிப்பெருமாள், பரிதியார் உரைகள்.                                2. மு.வ.-வின் ‘திரக்குறள் தெளிவுரை’                                                                                                    3. பாவாணரின் ‘திருக்குறள் மெய்ப்பொருளுரை’                                                                                    4. வ.சுப.மா.-வின் ‘வள்ளுவம்’                                                                                                                    5. ப.அருளி-யின் ‘நம் குறள்மறை கூறும் இல்வாழ்வு இன்பியல்’                                                           நன்றி!.                                                                                                                                                        

செவ்வாய், 18 டிசம்பர், 2007

மறந்திட்டோம், மாத்தமிழும் வீழவிட்டோம்!

உண்ணுங்கால் உலவுங்கால் உறங்குங் காலும்                                                  உரைத்ததுவும் கேட்டதுவும் தமிழுக் கென்றும்                                                      

கண்ணுங்கால் கவலுங்கால் களிக்குங் காலும்                                                        கனித்தமிழைக் காத்திடலே கருத்தாய்க் கொண்டும்                                             

 எண்ணுங்கால் எழுதுங்கால் எல்லாக் காலும்                                                                     எழிற்றமிழின் உயர்வொன்றே இலக்காய் வாழ்ந்தோர்                                               

மண்ணுங்கால் மகிழுங்கால் மற்றெக் காலும்                                                               மறந்திட்டோம்! மாத்தமிழும் வீழ விட்டோம்!                                                                                  
 - த. ந. - 01-08-2005.

பொன்னம்பலனாரைப் போற்றுகின்றோம்!

 பொன்னம்பலனாரைப் போற்றுகின்றோம்!


தூயதமிழ் தன்மானம் போற்றி வாழ்ந்தாய்!                                                                      துணிவுடனே மாணவர்க்கும் உணர்த்தி வந்தாய்!                                                        

தோயநலம் தமிழுக்கே தொய்வில் லாமல்                                                                          தொடர்காப்பு வினைபுரிந்தாய்! தொலையாத் தொல்லை                                              
தீயவுளத் தாரிழைத்தும் சிறிதும் மாறாத்                                                                            திடஞ்சான்ற தமிழ்மறவ! திறலின் வேந்தே!                                                                        
ஓயலறி யாப்பொன்னம் பலனே! உன்னை                                                                             உளம்நெகிழ நினைவேந்திப் போற்று கின்றோம்!                                                                                                                          
                                                                                                                                                                      - த. ந. - 10-12-2007.